BC மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் அதிகாரம் இல்லை! - பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சை பதில்!
ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சர்ச்சைக்குரிய வகையில் பதில் கூறியிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநில வழக்கறிஞர் அணியை சேர்ந்த வழக்கறிஞர் சங்கர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் முக்கியமாக, ஆணவப்படுகொலைகளுக்கு எதிராகவும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றம் புரிபவர்களின் மனநிலையையும் சமூக சூழலையும் ஆய்ந்து குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இது எங்களின் ஆய்வு வரம்புக்குள் வராது எனக் கூறியிருக்கிறது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய வழக்கறிஞர் சங்கர், SC/ST ஆணையம் பட்டியலின பழங்குடியின மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுக்கு நான்கு முறை விழிப்புணர்வு முகாம்களை நடத்தியிருக்கிறது. எனில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதிய வன்கொடுமைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் என்ன? பல சாதிய வன்கொடுமைகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மனோபாவத்தோடு நடந்துகொள்கின்றனர்.



அதேமாதிரி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குள்ளாகவே பிரிவினைகளால் மோதலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க அவர்களின் சமூக சூழலை புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தானே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படை விஷயத்தை கூட ஆணையத்தால் செய்ய முடியாது எனக் கூறுவது வேதனையளிக்கிறது என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


