பழனி கோயில் நில மோசடி: ``அடுக்கடுக்கான கேள்வி; பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன - CPM கே.பாலகிருஷ்ணன்
பழனி ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``பழனியில் முருகன் கோயிக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் சென்றதும், கொடைக்கானலில் இருந்து வந்த அதிகாரி அன்றே பணியில் இணைந்து இந்தப் பதிவை மேற்கொண்டதும், ரூ.2 கோடி மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதிலும் பல்வேறு மர்மங்கள் நீடிக்கின்றன.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாகப் பத்திரப்பதிவை ரத்து செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது நல்ல நடவடிக்கை என்றாலும், அமைச்சர், இது அறியாமல் நடந்த தவறு என்று கூறுவது பொதுமக்களிடையே சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருப்பதும், கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தும் இன்னும் யாரும் கைது செய்யப்படாததும் கேள்விகளை எழுப்பியுள்ளன. இம்முறைகேட்டில் முழுமையான விசாரணை நடத்தி, நிலத்தை மீட்க நீதிமன்றத்தை நாடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளது.
மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு நாடாளுமன்றத்திலும், அரசு நிகழ்ச்சிகளிலும் வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆட்சிக்கு வந்த அனைவரும் ஊழலை ஒழிப்பதாகக் கூறினாலும், தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் இன்னும் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வார்த்தைகளில் மட்டுமில்லாமல், ஊழலை முற்றாக ஒழிப்பதில் அரசு உறுதியோடு செயல்பட வேண்டும்.
பத்திரிகையாளர் விஜயன் மீது காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை அராஜகத்தின் உச்சம். அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


