கோவையில் அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து; தீக்கிரையான வீடுகள்; நடந்தது என்ன?
கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நாகராஜ் என்பவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது, கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மளமளவென பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எறிய தொடங்கியது.
அப்போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதனால் அடுத்தடுத்து இருந்த 4 ஓட்டு வீடுகள் தீக்கிரையாகின. இதில் ஒரு வீட்டில் இருந்த 50,000 பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை எரிந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் வீட்டிற்குள் இருந்தவர்கள் உடனடியாக, வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்து குறித்து துடியலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்தடுத்து கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


