சோனம் வான்சுக் உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற காவல்துறை; டெல்லியில் பரபரப்பு
நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கியது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சோனம் வான்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தார். 20 நாள்களைக் கடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் 8 கிலோவுக்கும் மேல் உடல் எடைக்குறைந்து, மிகவும் பலகீனமடைந்திருந்தார்.
அவரைப் போராட்டக் களத்தில் சந்தித்த பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் அவரைப் போராட்டத்தைக் கைவிட்டு, சிகிச்சை பெற வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதையெல்லாம் மறுத்த சோனம் வாங்சுக், இந்தப் போராட்டம் மூலம் கிடைக்கும் வெளிச்சம் அடுத்த தலைமுறையின் கல்வியைச் சிறப்பாக்கும் எனக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அனுராக் குமார் நேற்று பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவர் தலைமையிலான காவல்துறை இன்று காலை சோனம் வான்சுக்-கை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு வலுகட்டாயமாகக் கொண்டுச் சென்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சோனம் வான்சுக் ஆதரவாளர்கள் சிலர் அதைத் தடுக்க முயன்றதால் ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இருப்பினும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படியும் சோனம் வாங்சுக் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின்போது போராட்டக்காரர்கள் இடையூறு ஏற்படுத்த முயன்றதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.
எனினும், போலீசார் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, அவரைப் பத்திரமாக மீட்டனர். ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக்காரர்கள் உடனடியாகவும், அமைதியாகவும் அவ்விடத்தை விட்டு கலைந்து செல்ல வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தனது இன்ஸ்டாகிராம் நேரலையில், ``நான் எனது நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன் எனக் கூறி வீட்டின் கேட் பூட்டப்பட்டிருப்பதையும், வெளியே போலீஸ் காவலர் நின்றுகொண்டிருப்பதையும் நேரலையில் காட்டினார்.
இதற்குப் பிறகும் போராட்டம் தொடருமா? அல்லது போராட்டக் குழுவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பன குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


