லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு; தாலுகா அலுவலகங்களில் சிக்கிய ரூ. 82 லட்சம் லஞ்ச பணம்? விவரம் என்ன?

தமிழகம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் இணைந்து நேற்று (17.07.2026) திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

DVAC Release

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கமாக 13,78,250 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜி-பே மூலம் நடந்ததாகச் சந்தேகிக்கப்படும் 68,32,582 ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

மொத்தமாக 82,10,832 ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் கண்டறியப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை செய்தி வெளியிட்டிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தில் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் ரூ.2,22,200 கைப்பற்றப்பட்டுள்ளது. அடுத்ததாக கன்னியாகுமரி (அகஸ்தீஸ்வரம்) தாலுகா அலுவலகத்தில் ரூ.1,50,000, விருதுநகர் (வெம்பக்கோட்டை) தாலுகா அலுவலகத்தில் ரூ.1,40,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜி-பே மூலம் கண்டறியப்பட்ட சந்தேகத்துக்குரிய பரிவர்த்தனைகளில் கரூர் தாலுகா அலுவலகம் முதலிடத்தில் உள்ளது. அங்கு ரூ.16,33,654 மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகம் (ரூ.12,40,000), மூன்றாவது இடத்தில் கள்ளக்குறிச்சி - சின்னசேலம் தாலுகா அலுவலகம் (ரூ.9,00,000) இடம்பெற்றுள்ளன.

DVAC Release
DVAC Release

அதேபோல், சேலம் (ரூ.8,51,498), கோயம்புத்தூர் (ரூ.7,50,000), சென்னை - சோழிங்கநல்லூர் (ரூ.6,36,000), செங்கல்பட்டு - வண்டலூர் (ரூ.2,00,000), தென்காசி (ரூ.1,68,200), மதுரை - திருமங்கலம் (ரூ.1,25,000), மயிலாடுதுறை - சீர்காழி (ரூ.1,16,500) உள்ளிட்ட பல தாலுகா அலுவலகங்களிலும் சந்தேகத்துக்குரிய ஜி-பே பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், சேலம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 35 தாலுகா அலுவலகங்களில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.