சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஜெகன் மோகினி குகை; குணா குகைக்கு முன்பே பிரபலமான குகை தெரியுமா?
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் தண்ணீரில் மூழ்கியிருந்த ஜெகன் மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
கர்நடகாவில் உற்பத்தி ஆகும் காவிரி ஆறு, தருமபுரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து மலைகளுக்கிடையே நீர்வீழ்ச்சியாக விழும் ஒகேனக்கல் பகுதி இயற்கை அழகு மிகுந்த முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இங்கு காவிரியில் குளித்து பரிசலில் பயணம் செய்து, காவிரியில் பிடிக்கப்பட்ட மீன்கள் சுடச்சுட சமைத்து தரப்படுவதால் அவற்றை ருசியாக உண்டு மகிழ்வதற்காக தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலப்பயணிகள் திரண்டு வருகிறார்கள்.

2000 கன அடிக்குமேல் தண்ணீர் வந்துகொண்டிருந்த ஒக்கேனக்கலில் சமீப நாட்களாகப் போதிய மழை இல்லாததாலும், கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்து விடாததாலும் நீர்வரத்து 200 கன அடியாக குறைந்ததால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பொழிவிழந்து சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றமடையச் செய்து வருகிறது.
அதேநேரம், தண்ணீருக்குள் மூழ்கியிருந்த ஜெகன்மோகினி குகை வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அது என்ன ஜகன்மோகினி குகை? என்று இளைய தலைமுறையினர் கேட்கலாம். கொடைக்கானல் குணா குகைக்கு முன்பே மிகவும் பிரபலமான ஒகேனக்கலில் உள்ள ஜெகன்மோகினிக் குகை ஆகும். இது சமணர் குகைபோல இயற்கையாக அமைந்த குகை அல்ல.

பேய் படங்கள், மாயாஜாலப் படங்களுக்குப் புகழ்பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த இயக்குநர் விட்டலச்சார்யா இயக்கி வெளியாகி தென்னிந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்திய ஜெகன் மோகினி திரைப்படத்திற்காக 1978 ஆம் ஆண்டு இங்குள்ள மலைப்பாறையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தக் குகை.
தண்ணீரில் இதைப் பார்க்கும்போது த்ரில்லான அழகாக இருக்கும். அன்றிலிருந்து இது ஜெகன் மோகினி குகை என்று அழைக்கப்படுகிறது.
ஐவர் பாணி அருவி, மெயின் அருவி, முதலைப்பண்ணை ஆகியவற்றை பரிசலில் சென்று சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயனிகளை இந்த ஜெகன் மோகினி குகை தற்போது கவர்ந்து வருகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

