கீழடி: தொல்லியல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தயாரித்த ஆய்வறிக்கை; ASI-யை நாடி வெளியிட தமிழக அரசு முடிவா?

தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்துள்ள கீழடி அகழாய்வு இறுதி அறிக்கை மூன்றரை ஆண்டுகளாக வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில், அதை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் (ASI) தமிழகத் தொல்லியல் துறை கோரிக்கை விடுக்க முடிவு செய்துள்ளது.

கீழடி நாகரீகத்தின் தொன்மை மற்றும் வளர்ச்சி குறித்த ஆய்வு முடிவுகளை உள்ளடக்கிய அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் சமர்ப்பித்திருந்தார். ஆனால், கீழடியின் தொன்மையை உறுதிப்படுத்தும் வகையில் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்தால், அந்த அறிக்கையை ஏற்று வெளியிட மத்திய அரசு மறுத்ததாகக் கூறப்படுகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில், கட்டுமான அடுக்குகள் மற்றும் கரிம பகுப்பாய்வு (Carbon Analysis) முடிவுகளின் அடிப்படையில் கீழடி நகரம் கி.மு. 500-ஆம் ஆண்டளவில் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கி.மு. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு வரை கீழடி நகர நாகரீகம் செழிப்புடன் விளங்கியதாகவும், அதன் பின்னர் கி.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்குள் நகரம் படிப்படியாக நலிவடைந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கீழடி

இந்த அறிக்கை வெளியிடப்பட்டால் தமிழர் நாகரீகத்தின் தொன்மை மற்றும் நகரமயமான வாழ்க்கை முறையின் வரலாற்றுப் பின்னணி குறித்து முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று தமிழக தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

இதனிடையே, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கீழடி அகழாய்வு அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டுமென மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைக்க தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.