நெல்லை: இரு சாமானிய நண்பர்களின் பெருங்கனவு; அறிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் `பீம்ஜி புத்தகாலயம்

அடிப்படை வசதிகளே குறைவாக இருக்கும் ஒரு கிராமத்தில், அடுத்த தலைமுறை கல்வியால் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இரண்டு இளைஞர்கள் தொடங்கிய பீம்ஜி புத்தகாலயம் இன்று வாசிப்பின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் அறிவுக் கூடமாக இருந்து வருகிறது.

"படிப்பின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும்" இந்த ஒரு எண்ணம்தான் திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள செம்பத்திமேடு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (22, Visual Communication) மற்றும் முகிலன் (22, B.Com) ஆகிய இரு இளைஞர்களை, பீம்ஜி புத்தகாலயம் என்ற இலவச நூலகத்தை உருவாக்கத் தூண்டியது.

கிராமங்களில் சாலை, பேருந்து, பள்ளி போன்ற அடிப்படை வசதிகளுக்கே இன்னும் பல இடங்களில் சவால்கள் இருக்கும் நிலையில், "அடுத்த தலைமுறையாவது கல்வியின் மூலம் முன்னேற வேண்டும்" என்ற சமூகப் பொறுப்புணர்வுடன் இவர்கள் இந்த நூலகத்தைத் தொடங்கி உள்ளனர்.

இளைஞர்கள் தொடங்கிய பீம்ஜி புத்தகாலயம்

தொடக்கத்தில் அவர்களிடம் பெரிய நிதி எதுவும் இல்லை. கிராமத்தில் பயன்பாடின்றி இருந்த ஒரு பொதுஇடத்தைச் சுத்தம் செய்து, தங்களுடைய சேமிப்புப் பணத்தில் சீரமைத்தனர். அதன் பிறகு, நண்பர்களிடமும் கிராம மக்களிடமும் புத்தகங்கள் மற்றும் தேவையான உதவிகளை கேட்டனர். அந்தச் சிறிய முயற்சியே இன்று ஒரு நூலகமாக வளர்ந்திருக்கிறது.

இளைஞர்கள் தொடங்கிய பீம்ஜி புத்தகாலயம்

தற்போது இந்த நூலகத்தில் சுமார் 100 புத்தகங்கள் உள்ளன. நாவல்கள், சிறார் புத்தகங்கள், புதிர் நூல்கள், பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வு நூல்கள், என பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. அறிவுச் செல்வம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக உறுப்பினர் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

காலை நேரங்களில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. அதன்பின் அவர்கள் நூலகத்தில் புத்தகங்களை வாசிக்கிறார்கள். தினமும் சிலர் செய்தித்தாள் வாசிக்க வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் என பலரும் தங்கள் ஓய்வு நேரத்தை இங்கு வாசிப்புடன் செலவிடுகிறார்கள்.

சுதாகர், முகிலன்

இந்த முயற்சியைப் பற்றி சுதாகரும் முகிலனும் கூறுகையில், "படிப்பின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூலகத்தைத் தொடங்கினோம். நாங்கள் படித்த காலத்தில் வாய்ப்புகள் இருந்தும் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை.

அதுபோன்ற நிலை அடுத்த தலைமுறைக்கு வரக்கூடாது. இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர வேண்டும். வாசிப்பு என்பது அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்ல, வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு பழக்கம். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், கிராமங்களின் எதிர்காலத்தை முன்னேற்றப் போவது கல்விதான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்கிறார்கள்.

இந்தப் பயணம் சவால்கள் இல்லாமல் அமையவில்லை. போதுமான புத்தகங்கள் கிடைக்காதது, செய்தித்தாள் போன்ற அடிப்படை வசதிகளை தொடர்ந்து ஏற்பாடு செய்வதில் ஏற்பட்ட சிரமங்கள், ஆரம்பத்தில் மாணவர்களை நூலகத்திற்கு வரவழைப்பதில் இருந்த தயக்கம் என பல தடைகளை அவர்கள் கடந்து வந்துள்ளனர்.

இளைஞர்கள் தொடங்கிய பீம்ஜி புத்தகாலயம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நூலகத்தை ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் கொண்ட அறிவு மையமாக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் கனவு. வாசிப்புடன் சேர்த்து சமூக நிகழ்வுகள், விளையாட்டுக் கழகம், இளைஞர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் ஒரு சமூக மையமாகவும் இதை உருவாக்க விரும்புகிறார்கள்.

நூலகத்தைப் பார்வையிட்டபோது, புத்தகங்கள் குறைவாக இருந்தாலும் அவை நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த விதம், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த புதிர்கள், இந்த முயற்சியின் பின்னால் இருக்கும் சமூக அக்கறையை தெளிவாக உணர்த்தின.

புத்தகங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல; வாசிக்கும் மனங்களை உருவாக்குவதே முக்கியம் என்பதை, செம்பத்திமேட்டின் பீம்ஜி புத்தகாலயம் அமைதியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.