கூடங்குளம் தரவுகள் கசிவு: நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது- மாணிக்கம் தாகூர்
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது.
World Leaks என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்கிறது. அதில் அணுமின் நிலையத்தின் சில வரைபடங்கள், விநியோகஸ்தர்களின் விவரங்கள், ஆய்வுப் பதிவுகள், உபகரணங்களின் மதிப்பாய்வுகள் போன்றவை இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அணுமின் நிலையத்தின் ஆவணங்கள் கசிந்ததற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரும் இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய வரைபடங்கள் மற்றும் ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Reliance நிறுவனத்தின் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் இந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
இது போன்ற முக்கியப் பொறுப்புகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் போது பாதுகாப்பு பலவீனமடைவதைக் காட்டும் மற்றொரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

நமது நாட்டின் பாதுகாப்பில் எந்த சமரசமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், இந்தத் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு அவசர நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளேன்.
நாட்டின் உயரிய சைபர் பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) ஆகியோர் இந்தத் தீவிரப் பாதுகாப்பு குறைபாட்டிற்கு உரியப் பொறுப்பேற்று, துரித விசாரணை நடத்த வேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளேன்!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


