``எம்.பி-க்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? - மாணிக்கம் தாகூர்
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களவைச் செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. அந்த அறிவிப்பில், ``நாடாளுமன்ற வளாகத்திற்குள் பாதுகாப்பு, தனிநபர் தனியுரிமை அல்லது நாடாளுமன்றச் சலுகைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஸ்மார்ட் வாட்சுகள் (smart watches) மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் (smart spectacles) போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நவீன மின்னணு சாதனங்கள் தற்போது பரவலாகக் கிடைக்கிறது. இவற்றில் சில சாதனங்கள், உறுப்பினர்களின் தனியுரிமையைப் பாதிக்கக்கூடிய வகையிலும், நாடாளுமன்றச் சலுகைகளை மீறும் வகையிலும் பயன்படுத்தப்படக்கூடும்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.பி-யுமான மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் பக்கத்தில், ``நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் நடத்தக் கூடாது, முழக்கமிடக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடி கூட அணியக் கூடாது! அடுத்ததாக எம்பிக்கள் மூச்சு விடவும் மோடி அரசிடம் டோக்கன் வாங்க வேண்டுமா? போராடத் தடை, பேசத் தடை, பார்க்கத் தடை... நாடாளுமன்றத்தை ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றிவிட்டால் எந்தக் கேள்வியும் எழாது என்று மோடி அரசு கணக்கு போடுகிறது! பாசிச பாஜக அரசின் கோழைத்தனம்.
நாடாளுமன்றத்தில் அதானி பற்றி கேள்வி கேட்டால் உடனே மைக் கட் செய்யப்படும்! - நீட் தேர்வு முறைகேடு, மணிப்பூர் வன்முறை போன்ற மக்களின் அத்தியாவசியப் பிரச்னைகளைப் பேசினாலே அவையில் எதிர்க்கட்சிகளின் மைக் அணைக்கப்படுவது தான் இந்த புதிய இந்தியாவின் லட்சணமா? - மக்களின் நியாயமான குரலை எழுப்பினால் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்! இத்தகைய தடையுத்தரவுகள் மற்றும் தணிக்கைகள் மூலம் மக்களின் குரலை உங்களால் ஒருபோதும் நசுக்கிவிட முடியாது. மக்கள் மன்றத்தில் உங்களின் சர்வாதிகாரம் தவிடுபொடியாவது உறுதி!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

