அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திறனாளியான அவரது மரணத்துக்கு நீதிகேட்டு, உடலை வாங்காமல் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் அரசு வேலை, குழந்தை படிக்க உதவி, வீட்டுமனை போன்ற நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறுவதற்காக தமிழக சுற்றுலா துறை அமைச்சர்  ராஜேஷ்குமார் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் ஆகியோர் நேற்று இரவு 9.40 மணியளவில் சபரிவர்மன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினர். அமைச்சர்களுடன் மாவட்ட கலெக்டர் பிரதாப், எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் சென்றனர்.  சபரிவர்மனின் மனைவி அனந்தவள்ளி, அவரது சகோதரி கவுதமி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன் அவர்களது கோரிக்கைகளையும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது, சபரி வர்மன் உயிரிழப்புக்கு முதல்வர் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்ததுடன், அமைச்சர்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர்.

மரணமடைந்த சபரி வர்மன்

சபரிவர்மனின் குடும்பத்தினருடன் சுமார் 30 நிமிடம் பேசிவிட்டு வீட்டிலிருந்து வெளியேவந்த அமைச்சர்கள் உடனடியாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் கூறுகையில், "சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தும், அவற்றால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரேத பரிசோதனை வீடியோவை  எங்களின் தரப்பு மருத்துவ குழுவிடம் வழங்கி ஆய்வு செய்வோம். அதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் மதுரை உயர் நீதிமன்ற கிளையை நாடுவோம். அதற்காக ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளோம். அந்த அறிக்கையில் தவறு இல்லை என்றால் உடலை வாங்க தயாராக இருக்கிறோம்" என்றனர்.

அமைச்சர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீநாத் ஆகியோர் சபரிவர்மன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்

சபரிவர்மன் இறந்தது எத்தனை மணிக்கு என்ற விபரம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், கொலை வழக்கில் சிறை வார்டன்கள் 3 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், சிறையில் இருந்த 8 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்த  குற்றவாளிகள் சிலர் கொடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்துள்ளது. எனவே , இது வழக்கை திசைதிருப்பும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது" என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.