சகோதரியின் கணவர் மீது காதல்: வருங்கால கணவனை வரவைத்து கொலை செய்து வனவிலங்குகளுக்கு உணவாக்கிய பெண்

புனேயில் ஷியா என்ற பெண் தனது காதலனோடு சேர்ந்து தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் கேதன் அகர்வால் என்பவரை மலை உச்சிக்கு அழைத்துச்சென்று அங்கிருந்து 400 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு கொலை செய்தார். இச்சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் அது போன்ற ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் கிரித்ஹ் மாவட்டத்தில் உள்ள ஜமுவா சோக் என்ற இடத்தை சேர்ந்த நீரஜ்(20) என்ற வாலிபருக்கு அதே ஊரைச்சேர்ந்த ஊர்மிளா என்பவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஊர்மிளா தனது சகோதரியின் கணவர் சுபாஷ் பஸ்வான் என்பவரை காதலித்து வந்தார்.

வீட்டில் பெற்றோர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் தனது சகோதரியின் கணவனை இழக்க நேரிடும் என்று ஊர்மிளா நினைத்தார். இது தொடர்பாக ஊர்மிளா தனது காதலன் பஸ்வானுடன் கலந்து ஆலோசித்தார்.

இதில் வருங்கால மணமகனை கொலை செய்துவிட இருவரும் முடிவு செய்தனர். இதற்காக ஊர்மிளா தனது வருங்கால கணவன் நீரஜை தொடர்பு கொண்டு பீகார் எல்லையில் உள்ள பேலா வனப்பகுதிக்கு வரும்படி கேட்டுக்கொண்டார்.

அங்கு ஏற்கனவே பஸ்வானும் ஊர்மிளாவும் வந்து காத்திருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நீரஜை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். அதன் பிறகு உடலை வனவிலங்குகள் சாப்பிட்டுவிடும் என்ற நம்பிக்கையில் வனப்பகுதியில் போட்டுவிட்டு சென்றனர். நீரஜ் காணாமல் போனது குறித்து அவரது தந்தை போலீஸில் புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் நீரஜ் மொபைல் போன் சிக்னலை மையமாக வைத்து பேலா வனப்பகுதியில் சென்று தேடினர்.

அங்கு நீரஜ் உடல் கிடைத்தது.

விசாரணையில் நீரஜ் குடும்பத்திற்கு யாரும் பகை இல்லை என்று தெரிய வந்தது. அதேசமயம் நீரஜ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிய வந்தது. இதையடுத்து ஊர்மிளாவின் பக்கம் போலீஸாரின் பார்வை திரும்பியது. கொலை நடந்த இடத்தில் ஊர்மிளாவின் மொபைல் போனும் இருந்தது தொழில் நுட்ப ஆய்வில் தெரிய வந்தது. உடனே ஊர்மிளாவை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது சகோதரியின் கணவன் பஸ்வானும் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.