ITR தாக்கலில் வருமான கணக்கை தவறாக காட்டினால்... தாமதமாக தாக்கல் செய்தால் என்ன அபராதம்?
வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதை தவறும் போதும், தாக்கல் செய்யும் போது சில தவறுகளை செய்வதாலும் வருமான வரித் துறை நமக்கு அபராதங்களை விதிக்கும்.
அந்த அபராதங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்...
பிரிவு 234F
வருமான வரிக் கணக்கு தாக்கலை குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் செய்யவில்லை என்றால், தாமதக் கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படும். ஒருவேளை, தாக்கல் செய்பவரின் வருமானம் ரூ.5 லட்சம் தாண்டவில்லை என்றால், தாமதக் கட்டணம் வெறும் ரூ.1,000 மட்டுமே.
பிரிவு 140A(3)
பிரிவு 140A(1)-ன் கீழ் செலுத்த வேண்டிய சுய மதிப்பீட்டு வரி, கூடுதல் சலுகை வரி, வட்டி, கட்டணம் போன்றவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ செலுத்தத் தவறும்போது, அபராதத் தொகையை வரி வசூல் அதிகாரி முடிவு செய்வார்.
பிரிவு 234G
வரித் தாக்கலின் போது, பிரிவு 35, பிரிவு 80G-இன் கீழ் தேவைப்படும் அறிக்கை அல்லது சான்றிதழைச் சமர்ப்பிக்கத் தவறும்போது, விதிமீறல் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் தலா ₹200 கட்டணம் விதிக்கப்படும்.
பிரிவு 158BFA(2)
வருமான வரிக் கணக்குத் தாக்கலின் போது, மறைக்கப்பட்ட வருமானத்திற்கு, அந்த வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரியில் 50% அபராதமாக விதிக்கப்படும்.
பிரிவு 221(1)
வருமான வரியை செலுத்த தவறும் போது, அபராதத் தொகையானது வரி வசூல் அதிகாரியால் விதிக்கப்படும். இது நிலுவையில் உள்ள வரித் தொகையை விட அதிகமாக இருக்காது.
பிரிவு 234E
பிரிவு 200(3), பிரிவு 206C(3)-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட கால வரம்பிற்குள் TDS/TCS அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறும்போது, தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 அபராதம் விதிக்கப்படும்.
பிரிவு 270A(1)
வருமான வரிக் கணக்குத் தாக்கலில் வருமானத்தைக் குறைத்துக் காட்டும்போது அல்லது தவறாகக் காட்டும்போது, குறைத்துக் காட்டப்பட்ட வருமானத்திற்குச் செலுத்த வேண்டிய வரியில் 50 சதவிகிதத்திற்கு இணையான தொகை அபராதமாக விதிக்கப்படும்.
ஒருவேளை வருமானத்தைத் தவறாகக் காட்டியிருந்தால், அபராதம் குறைத்துக் காட்டப்பட்ட வருமானத்திற்கான வரியில் 200% ஆக உயரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

