ISRO: நெருக்கடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்; 100 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்தது ஏன்?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ராக்கெட்கள், செயற்கை கோள்களைத் தயாரித்து விண்ணிற்கு அனுப்பி வருகிறது. அதோடு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பும் ககன்யான் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் இத்திட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக இஸ்ரோவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து தங்களது வேலையை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் 120 விஞ்ஞானிகள், இயக்குநர்கள், உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து மட்டும் 80 பேர் தங்களது வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்குள்ள திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவில் இருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேர ஆரம்பித்துள்ளனர்.
இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியில் இருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுவரை இஸ்ரோ மைய இயக்குநர்கள் விருப்ப ஓய்வுக்கு அனுமதி கொடுத்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களிடமிருந்து அந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இனி விஞ்ஞானிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிலிருந்து விலக அல்லது விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் அது தொடர்பான மனுக்களை இஸ்ரோவின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் பதவி விலகுவதை இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி படுத்தினார். ஆனால் இந்த நெருக்கடியில் இருந்து வெளியில் வர முடியும் என்றும் ஒவ்வொரு நிறுவனமும் இது போன்ற நெருக்கடியைச் சந்திக்கக்கூடிய ஒன்றுதான் என்றும் தெரிவித்தார்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


