தஞ்சை மாவட்டம், சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்: பதவி யோகம் கிடைக்கும்... குரு தோஷம் நீங்கும்!

முருகப்பெருமான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவை மகிமையும் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலங்கள். அத்தகைய தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே நம் வினைகள் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்கள். அப்படி ஒரு தலம் தான் சேங்கனூர்.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகில் மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவத்தலம் சேய்ஞலூர். திருஞானசம்பந்தர் பாடிய தலம் இது.

சேய் ஆகிய முருகப் பெருமான், சிவபெருமானை வழிபட்ட நல்ல ஊர் என்பதால்... சேய்+நல்+ஊர் என்பது சேய்ஞலூர் என்றானது. தற்போது, சேங்கனூர் என்றழைக்கப்படுகிறது.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்தத் தலத்தில்தான் விசார சர்மருக்கு சண்டீடப் பதவி அளித்து அருள்புரிந்தார் ஈசன் என்கிறது தலபுராணம். ஆதலால், இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை, `பதவி தரும் பரமன்’ என்றே போற்றுகிறார்கள் பக்தர்கள். இவரை வழிபட்டால் பதவி யோகம் அருள்வார் என்பது நம்பிக்கை.

இங்கே ஈசன் அருள்மிகு சத்தியகிரீஸ்வரராக அருள்பாலிக்கிறார். அம்பிகையின் திருநாமம் ஸ்ரீசகிதேவி.

முருகன் இந்த ஊரில் தங்கியிருந்து ஈசனுக்கு பூஜை செய்தாராம். அதற்காக அவர் அமைத்த தீர்த்தம் குமார தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் அவர் நீராடிய நதியை சுப்ரமணியா நதி எனப் போற்றுகின்றன புராணங்கள். தற்போதும் உள்ள மண்ணியாறுதான் அந்த நதி என்கிறார்கள்.

தன்னை பூஜித்த முருகப்பெருமானுக்கு ஒரு தைப் பூச தினத்தன்று சிவபெருமான் காட்சி கொடுத்தார். இந்த இடத்தில் முருகப்பெருமானுக்காக தேவ தச்சன் ஒரு நகரை நிர்மாணித்துத் தந்தாராம். அது குமாரபுரி என வழங்கப்பட்டது என்ற தகவலும் உண்டு. இங்கே தனிச் சந்நிதியில் அழகு மிளிர அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான். அருணகிரியார் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்த ஆலயம், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்களில் ஒன்றாகும். காலத்தால் சிதைவுபடத் தொடங்கிய நிலையில் புனர்நிர்மாணம் செய்தார்களாம். கட்டுமலை போன்ற அமைப்பில் திகழ்கிறது கருவறை. உள்ளே சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்கிறார் சத்தியகிரீஸ்வரர்.

சுவாமி சந்நிதிக்கு இடப்புறத்தில் வடக்கு நோக்கி அருள்கிறாள் அம்பிகை சகிதேவி. தம்மை வழிபடும் அன்பர்களுக்குக் கருணையோடு வரங்களை வாரி வழங்கும் கற்பகமாய் அருள்கிறாள் இந்த அன்னை.

இந்தத் தலத்துக்கு வந்து புண்ணிய நீராடி வழிபடும் அடியவர்களுக்கு, குரு தோஷத்தை நீக்கி தர்மார்த்த காம மோக்ஷத்தை வழங்குகிறாராம் இறைவன். அவருக்குச் சகியாய் உடன் நின்று அம்மையும் அருள்கிறாள். அம்மையும் அப்பனும் இங்ஙனம் அனுக்கிரகம் செய்வது, இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பம்சம்.

முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியை சிபிச் சக்ரவர்த்தி அரசாண்டபோது நிகழ்ந்த ஓர் அற்புதம் இத்தலத்தின் மகிமையைச் சொல்லும். ஒருமுறை சிபிச் சக்ரவர்த்தி, தம்முடைய கிரக தோஷத்தைப் போக்கிக்கொள்ள 360 வீடுகளைக் கட்டி, பசுக்களுடன் பூதானம் செய்தாராம். அப்போது, தானம் பெறுவோரில் எண்ணிக்கையில் ஒருவர் குறைந்தார். அதனால் மன்னன் மனம் கலங்கி இறைவனை வேண்டினார்.

சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்
சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்

இந்தச் சூழலில், சேய்ஞலூரின் இறைவனும் இறைவியுமே அந்தணத் தம்பதியாக வந்து மாமன்னரின் தானத்தை ஏற்று அவரின் மனக்குறையைத் தீர்த்து அருள்பாலித்தார்களாம். இன்றைக்கும் அந்த வீடு `சுவாமி வீடு’ என்ற பெயரில் திகழ்கிறது. அங்கே அம்மையும் அப்பனும் முறையே சிவலோகநாயகி - கயிலாயநாதர் எனும் திருப்பெயர்களில் குடிக்கொண்டுள்ளதாகப் போற்றுகின்றனர்.

நாரத மகரிஷி மூலம் இத்தலத்தின் மேன்மையை அறிந்த அரிச் சந்திர மகாராஜாவும் இந்தத் தலத்துக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டு, தைப்பூச தீர்த்தோத்சவம் நடத்திவைத்தார் என்கின்றன ஞானநூல்கள்.

அற்புதமான இந்தத் தலத்துக்கு நீங்களும் ஒருமுறை குடும்பத்துடன் சென்று வாருங்கள். சகிதேவியின் திருவருளால் சகல கவலைகளும் தீரும்; ஐயன் சத்தியகிரீஸ்வரரின் பேரருள் உங்களுக்கு அரணாகும்.

எப்படிச் செல்வது?: கும்பகோணம் - திருப்பனந்தாள் சாலையில், திருப்பனந்தாள் நகரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் சேங்கனூர் ஆலயம் உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.