Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?
Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையான வலி ஏற்பட்டது.
எம்.ஆர்.ஐ எடுத்துப் பார்த்தபோது, ACL தசைநார் பகுதி கிழிந்துள்ளதாகத் தெரிந்தது. மேலும், முட்டி குருத்தெலும்பிலும் கிழிசல் இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் தற்போது பிசியோதெரபி சிகிச்சை எடுத்து வருகிறேன். இதன் பிறகு எனது பிரச்னை குணமாகுமா... நான் மீண்டும் சாதாரண வாழ்க்கையை வாழ என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, எலும்பியல் மருத்துவரும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான விஜய்கிஷோர் கொண்ட்ரெட்டி
ஒருவருக்கு ஏசிஎல் (ACL) ஜவ்வு கிழிசலும், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசலும் ஒன்றாக இருக்கும்போது, அதற்கு அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காண்பதுதான் மிகச் சரியான வழியாகும். அதாவது, குறிப்பிட்ட இந்தப் பிரச்னைக்கு ஓப்பன் சர்ஜரி (Open surgery) தேவையில்லை.
ஆனால், கீஹோல் (Keyhole) சிகிச்சை முறை என்று சொல்லப்படும் ஆர்த்ரோஸ்கோபி (Arthroscopy) தொழில்நுட்பம் மூலம் ஏசிஎல் மறுசீரமைப்பு மற்றும் மெனிஸ்கஸ் ஜவ்வு தையல் (ACL reconstruction plus meniscus repair) போன்ற சிகிச்சைகள் நிச்சயம் தேவைப்படும்.
ஏசிஎல் மறுசீரமைப்பு என்று வரும்போது, இதற்கு அறுவை சிகிச்சை அவசியமா? என்றே பலரும் கேட்கிறார்கள். 50 முதல் 55 வயதிற்குட்பட்டவர்களுக்கு இந்தச் சிகிச்சை மிகவும் அவசியம்.
காரில் இருக்கும் சீட் பெல்ட் (Seat belt) போன்றதுதான் நம் முழங்காலில் உள்ள இந்த ஏசிஎல் ஜவ்வு. நீங்கள் நெடுஞ்சாலையில் (Highway) 100 கி.மீ வேகத்தில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, சீட் பெல்ட் அணியாமல் திடீரென பிரேக் போட்டால் உங்களுக்கு என்ன ஆகுமோ, அதே போன்ற ஒரு நிலைதான் ஏசிஎல் ஜவ்வு இல்லாத முழங்காலுக்கும் ஏற்படும்.
உங்களுக்கு ஏசிஎல் ஜவ்வு இல்லை என்றால், நீங்கள் படிகளில் ஏறும்போதோ, இறங்கும்போதோ அல்லது வேகமாக நடக்கும்போதோ முழங்கால் மூட்டு, பிடிமானம் இல்லாமல் விலகிச் செல்வது போன்ற (Giving away) உணர்வு அல்லது அறிகுறிகள் ஏற்படும். எனவே, இந்த வகையான நோயாளிகளுக்கு ஏசிஎல் சிகிச்சை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

அடுத்து உங்களுக்கு மெனிஸ்கஸ் (Meniscus) ஜவ்வில் கிழிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மெனிஸ்கஸ் ஜவ்வு என்பது கால்களின் எலும்புகளுக்கு இடையில் அமைந்திருக்கும். நீங்கள் நடக்கும்போது இது எலும்புகளுக்கு இடையே வந்து, ஷாக் அப்சார்பர் (Shock absorber) போலச் செயல்படுகிறது.
மெனிஸ்கஸ் ஜவ்வில் கிழிசல் ஏற்படும்போது, அதைச் சரியாகக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை அளிப்பது மிகவும் முக்கியம். அதைச் சரியாகக் கவனிக்காவிட்டால், அது நாளடைவில் பெரிதாகி, நோயாளிகளுக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் (Degeneration of the joint) ஆரம்பித்துவிடும்.
பொதுவாக 55 வயதிற்குப் பிறகுதான் ஆஸ்டியோஆர்த்ரைடிஸ் (Osteoarthritis) எனப்படும் மூட்டுத் தேய்மானம் ஏற்படும். ஆனால், நீங்கள் இந்தச் சிகிச்சையைச் செய்து கொள்ளாவிட்டால், மிக இளம் வயதிலேயே மூட்டுத் தேய்மானம் ஏற்பட்டுவிடும். எனவே, மெனிஸ்கஸ் ஜவ்வு பாதிப்பைக் கவனித்து குணப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும்.
சுருக்கமாகச் சொன்னால், ஏசிஎல் மற்றும் மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசல்களைச் சரியாகப் பரிசோதித்து, அவற்றுக்குரிய சிகிச்சையை அளிப்பது மிகவும் அவசியம். இதற்கு உடனடியாக கீஹோல் சிகிச்சை முறையை மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
சிகிச்சை செய்யாமல் சில நாள்கள் பொறுத்திருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், மெனிஸ்கஸ் ஜவ்வு கிழிசல் இன்னும் பெரிதாகி, அதன் விளைவுகள் மிகவும் மோசமடையக்கூடும். எனவே, இந்த வகையான பிரச்னைகளுக்கு ஆரம்பகட்டத்திலேயே சிகிச்சை எடுத்து மூட்டுகளை நிலைப்படுத்துவதுதான் (Early stabilization) சரியான தீர்வாகும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


