Tv update: செகண்ட் லவ் ஷூட்டிங்கை மும்பைக்கு கொண்டு போனது ஏன்?
மறுபடியும் ஹீரோ.. நெகிழும் காமெடியன்!
காமெடி மற்றும் சப்போர்ட் கேரக்டர்கள் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் அழகப்பன். சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் தொடர் இவரை ஹீரோ ஆக்கியது.
அந்த தொடர் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து ஓடிய போதே, சீரியல் ஏரியா அழகப்பனை ஏற்றுக் கொண்டது என்பது தெளிவாகத் தெரிந்தது.
அந்த தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது அதே சன் டிவியில் சிறகுகள் என்ற புதிய சீரியலில் கமிட் ஆகியிருக்கிறார்.
அழகப்பனிடம் பேசிய போது,
காரைக்குடிப் பக்கத்துல இருக்கிற கொத்தமங்கலம் எங்க ஊரு. நான் நடிக்க போறேன்னு சொன்னப்ப எங்க அம்மா அவன் விருப்பம்னு சொல்லிட்டாங்க. அப்பா ரொம்பவே பயந்தார். திட்டினார். நடிக்கப் போய் தோத்தவங்கதான் நிறையனு சொல்றாங்க. பேசாம வேற நல்ல வேலை எதுவும் தேட வேண்டியதுதானேன்னார். பையன் எதிர்காலத்து மேல இருந்த அக்கறை அது.
வீட்டு ஆதரவு ஒருமனதாக இல்லாத சூழலும் ஒரு வகையில எனக்கு உதவுச்சு. ஒருவித பயம் இருந்ததால சின்சியரா முயற்சி செய்துட்டே இருந்தேன்.
துணை நடிகரா காமெடிக் காட்சிகளில் வந்து பல சிரமங்களுக்கிடையில் ஒருவழியா கதாநாயகன் ஆனேன். அந்த சீரியல் நல்ல பெயர் வாங்கித் தந்தது.
அதனால அந்த தொடர் முடிவடைந்ததுமே வேற வேற இடங்கள்ல இருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனா ஆனந்த ராகம் வாய்ப்பைத் தந்த சன் டிவியில வெயிட் பண்ணுங்கனு சொன்னாங்க. சரின்னு இருந்தேன். இப்ப ஹீரோவா மறுபடி ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்கு. தயாரிப்பாளர்களுக்கும் சேனலுக்கும் என் நன்றிங்கிறது வெறுமனே ஃபார்மாலிட்டிக்கான வார்த்தைகள் இல்ல.
ஏன்னா, இன்னைக்கு போட்டி நிறைஞ்ச இடமா சின்னத்திரையும் மாறிட்ட சூழல்ல இந்த இடத்துக்கு வர்றதுக்குள் நான் பட்ட சிரமங்கள் எனக்கு மட்டுமே தெரியும் என நெகிழ்கிறார்.

செகண்ட் லவ்! ஏன் மும்பையில் ஷூட்டிங்?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கும் செகண்ட் லவ் நிகழ்ச்சியின் முழு ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டது. இது குறித்து ஏற்கெனவே விகடன் தளத்தில் செய்தி வெளியாகி இருந்தது நினைவிருக்கலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனமே இந்த நிகழ்ச்சியையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரம்யா கிருஷ்ணன் வார இறுதிகளில் தொகுத்து வழங்க, நடிகை ஸ்ருதிகாவும் ஒரு தொகுப்பாளராக தினமும் வருகிறார்.

இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை சென்னையில் வைக்காமல் மும்பையில் நடத்தியது குறித்து டிவி ஏரியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அது குறித்து விசாரித்தபோது,
டிவி ரியாலிட்டி ஷோக்கள் ஷூட்டிங் செய்ய சென்னையில் இல்லாத வசதி வாய்ப்புகளா? பூந்தமல்லியில் இருக்கும் வேல்ஸ் ஃபிலிம் சிட்டியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. விஜய் டிவி, ஜீ தமிழ் இரண்டின் சீரியல்களுமே ஒரே நேரத்தில் இங்கு ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.
பிக்பாஸ் வீடு ஒவ்வொரு வருடமும் இங்குதான் செட் போடப்பட்டு ஷூட்டிங் நடக்கிறது. சொல்லப்போனால் மலையாள பிக்பாஸ் செட் கூட கடந்த காலங்களில் இதே இடத்தில் நடந்தது.
இப்படியிருக்க, செகண்ட் லவ் நிகழ்ச்சியின் ஷூட்டிங்கை மும்பையில் நடத்தியதற்குக் காரணம், தேவையற்ற சலசலப்புகள் உருவாகி ஷூட்டிங் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தானாம்" என்கிறார்கள் நிகழ்ச்சியின் உள் விவகாரங்கள் அறிந்த சிலர்.
கடந்த காலங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தபோது சில அரசியல் கட்சிகள் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக குரல் கொடுத்தது நினைவிருக்கலாம்.
`செகண்ட லவ் கான்செப்ட்டும் தமிழுக்குப் புதிது என்பதால் நிகழ்ச்சியை முழுவதுமாகப் பார்க்காமலேயே எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என யாராவது கிளம்பி ஷூட்டிங்க் ஸ்பாட்டில் பிரச்னை செய்தால்? கடந்த காலத்தில் பிக்பாஸ்க்கு எதிராக இப்படிச் சிலர் கிளம்பி போராட்டம் பண்ணியதை மனதில் வைத்தே, ஷூட்டிங்கை மும்பைக்குக் கொண்டு போய் விட முடிவு செய்தார்களாம்.
ஒளிபரப்பு தொடங்கிய பிறகு எதிர்ப்பு ஏதும் வரவில்லையென்றால் அடுத்தடுத்த சீசன்களை சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


