தரமான கற்பித்தல்; தனிப்பட்ட வழிகாட்டுதல் - சாதனைகள் படைக்கும் வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளி!

சேலம் மாவட்டம், வீரபாண்டியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளி, கல்வி மற்றும் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில அளவிலான சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறது. தரமான கற்பித்தல், ஒழுக்கமான கல்விச் சூழல் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் அணுகுமுறை ஆகியவை இந்தப் பள்ளியின் வெற்றிக்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு மாதிரிப் பள்ளி, குறுகிய காலத்திலேயே கல்வித் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. 2026-ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்று, தனது தரமான கல்வி முறையை மீண்டும் நிரூபித்துள்ளது.

மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையில் நவீன அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகம், வளமான நூலகம், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால், மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல், போட்டித் தேர்வுகள், கலை மற்றும் இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளிலும் தொடர்ந்து சிறப்பான சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசேகரன் கூறுகையில், "கல்வி கற்பிப்பதோடு மட்டுமல்லாமல், ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கை நோக்கிய பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மாணவர்கள் தொடர்ந்து மாநில அளவில் சாதனை படைத்து வருகின்றனர்" என்றார்.

உதவித் தலைமை ஆசிரியர் செந்தில்குமார் கூறுகையில், "ஐந்தாம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கியே மேல்நிலைப் பள்ளிக்கான சேர்க்கை நடைபெறுகிறது. தரமான கற்பித்தலும், தனிப்பட்ட வழிகாட்டுதலும் மாணவர்களின் வெற்றிக்குக் காரணமாக உள்ளன" என்றார்.

அரசுப் பள்ளியில் இருந்து மாநில அளவில் முதலிடம்

இந்த அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி தேவதர்ஷினி, 2026-ம் ஆண்டு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) கலந்தாய்வில், 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்று குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளார்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடத்தையும், சேலம் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றார். மேலும், 199 கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை முழுமையாக அரசுப் பள்ளியிலேயே கல்வி பயின்ற தேவதர்ஷினி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பயிற்சியும், பெற்றோரின் ஊக்கமும் தனது வெற்றிக்கான முக்கியக் காரணம் எனக் கூறுகிறார்.

கல்வியில் மட்டுமல்லாமல், கலைத்திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் மாநில அளவில் வெற்றிகளைப் பெற்றுள்ள அவர், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய மூன்று முக்கியப் பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று டிரிபிள் சென்டம் (Triple Centum) சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த தேவதர்ஷினி, தனது குடும்பத்தில் உயர்கல்விக்குச் செல்லும் முதல் தலைமுறை பட்டதாரியாக உருவாக உள்ளார். வேலூர் வி.ஐ.டி. (VIT) பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பைத் தொடர வேண்டும் என்பதோடு, எதிர்காலத்தில் யு.பி.எஸ்.சி. (UPSC) தேர்வில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப் பணியில் (IAS) அதிகாரியாகச் சேவையாற்றுவதே தனது லட்சியம் எனத் தெரிவித்துள்ளார்.

தேவதர்ஷினி

தொடரும் வெற்றிப் பயணம்

2024-ம் ஆண்டு இதே அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவி இராவணி, 199.5 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று, 7.5 சதவிகித அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டில் மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தார்.

அவரைத் தொடர்ந்து, 2026-ல் தேவதர்ஷினி மாநில அளவில் முதலிடம் பெற்றிருப்பது, வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளியின் தரமான கற்பித்தல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கமான கல்விச் சூழல் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பான வழிகாட்டுதலின் தொடர்ச்சியான வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. இரண்டு முறை மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களை உருவாக்கியுள்ள இந்த அரசு மாதிரிப் பள்ளி, தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளது என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.