தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமாருக்கு 6 மாதங்கள் பணி நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்!

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ்-க்கு மேலும் 6 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து, அகில இந்திய சேவைகள் தொடர்பான விதிகளின் அடிப்படையில் மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன்மூலம், வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெறவிருந்த டாக்டர் சாய்குமார், மேலும் ஆறு மாதங்கள் தலைமைச் செயலாளராக தொடர உள்ளார்.

டாக்டர் சாய்குமார் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் அவர் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.

சாய்குமார் ஐ.ஏ.எஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டபோதும், தலைமைச் செயலாளராக இருந்த சாய்குமார் தொடர்ந்து பதவியில் நீடித்தார்.

புதிய அரசு அமைந்தபின் தலைமைச் செயலாளரை மாற்றுவது வழக்கமான நிர்வாக மாற்றமாக கருதப்பட்டாலும், இந்த முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு கடிதம் எழுதி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதை பரிசீலித்த மத்திய அரசு, 6 மாத பணி நீட்டிப்புக்கு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

டாக்டர் சாய்குமார், தமிழ்நாட்டின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். மதுரை, தர்மபுரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ள அவர், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், நகராட்சி நிர்வாக ஆணையம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். மேலும், அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.