ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு செக்: இந்தியா, சீனாவிற்கு 100% வரி? - அமெரிக்காவின் புதிய மசோதா!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை கொண்டு வந்தது அமெரிக்காவின் இரு கட்சி ஆதரவு கொண்ட செனட் உறுப்பினர்கள் குழு ஆகும்.
இந்த மசோதா சமீபத்தில் மறைந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் முன்னெடுத்த மசோதா ஆகும்.
எந்தெந்த நாடுகள்?
இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜன் ஆகிய நாடுகள் தான் அந்த ஐந்து நாடுகள்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தப் புதிய மசோதா மூலம் இந்த நாடுகளுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.
முன்பு, இது 500 சதவிகித வரியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சிலருக்கு விலக்கு...
ஆனால், இந்த மசோதாவின் கீழ், ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, அந்த ஐரோப்ப நாடுகள் ரஷ்யாவை சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன என்றும், அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.
ஏன் இந்த நடவடிக்கை?
இந்த மசோதா வெறும் வரி விதிப்பு மசோதா மட்டுமல்ல. இது ரஷ்யாவின் எரிசக்தி, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, ரஷ்ய அதிபர் புதினுக்கு கொடுக்கும் வணிக நெருக்கடி.
ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் பொருள் இறக்குமதி செய்யப்படுவது ரஷ்யாவின் போருக்கு உதவி செய்வதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு கெடுபிடி விதிக்க தான் அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.
இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரவேற்பும் மிகப்பெரியதாக இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
