America: ``ஹார்முஸைக் கடக்கும் கப்பல்களுக்கு 20% வரி வேண்டும் - அதிபர் ட்ரம்ப் பதிவும் சர்ச்சையும்
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், உலகின் மிக முக்கியமான கடல்வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சர்வதேச கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதியில் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலாக அந்த வழியாகச் செல்லும் கப்பல்களின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை அமெரிக்காவிற்குக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "இனிமேல் அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும். ஆனால், நியாயமான முறையில் இந்த அபாயகரமான பகுதியில் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவுகளை ஈடுகட்ட, அதன் வழியாகக் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளின் மீதும் 20 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த அதிரடி முன்மொழிவு அதன் சட்டபூர்வத்தன்மை மற்றும் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் குறித்து உலகளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக, கப்பல் நிறுவனங்கள் தங்களது சரக்குகளின் மதிப்பில் 2% முதல் 3% வரை மட்டுமே கட்டணமாகச் செலுத்துவது வழக்கம். ஆனால், ட்ரம்ப் கோரும் 20% கட்டணம் என்பது தற்போதைய நிலையை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என்பதால், எந்தவொரு நிறுவனத்தாலும் இதைச் செலுத்த முடியாது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், அமெரிக்கா பாதுகாப்பு வழங்கினாலும் கூட, அங்குள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு காப்பீட்டு நிறுவனங்கள் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்க மறுக்கக்கூடும் என்பதால், இறுதி முடிவை காப்பீட்டு நிறுவனங்களே தீர்மானிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது சர்வதேச கடல் எல்லையாகும். சர்வதேச சட்டங்களின்படி, இங்கு அனைத்து நாடுகளின் கப்பல்களும் கட்டணமின்றி சுதந்திரமாகச் செல்ல உரிமை உண்டு. இதற்கு முன்பு ஈரான் இதேபோன்ற சேவை கட்டணங்களை விதிக்க முயன்றபோது, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
சரக்கு மதிப்பின் அடிப்படையில் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் முறை வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளது. 1400-களின் தொடக்கம் முதல் 1800-களின் நடுப்பகுதி வரை டென்மார்க் நாடு தனது ஓரேசுண்ட் கடல் வழியைக் கடக்கும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பின் அடிப்படையில் கட்டணம் வசூலித்தது.
ஆனால், வேடிக்கை என்னவென்றால், அன்று அமெரிக்கா தலையிட்டுத்தான் டென்மார்க்கின் அந்தக் கட்டண முறையை ரத்து செய்ய வைத்தது. இன்று அதே அமெரிக்கா, பாதுகாப்பு என்ற பெயரில் அதேபோன்ற கட்டணத்தை வசூலிக்கத் துடிப்பது வரலாற்று முரண் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


