என்னைத் தூக்கிலிடுங்கள்; நான் காந்தி அல்ல - ஒரே குடும்பத்தில் மூவரைக் கொன்ற குற்றவாளி திமிர் பதில்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாறா போத்துண்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை (61). செந்தாமரையின் மனைவி சில ஆண்டுகளுக்குமுன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

அதற்கு பக்கத்து வீட்டுக்காரர்களான சஜிதா மற்றும் புஷ்பா ஆகியோர்தான் காரணம் என்று கருதினார். இதனால் அவர்கள் மீது செந்தாமரைக்குப் பகை ஏற்பட்டது. 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி சஜிதாவை கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் செந்தாமரை.

அந்தக் கொலை வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், செந்தாமரைக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியில் வந்த செந்தாமரை, தனது பகையைக் கைவிடவில்லை. இதற்கிடையில், செந்தாமரைக்குப் பயந்து புஷ்பா என்ற பெண் அந்த ஊரை விட்டே ஓடிவிட்டார்.

இதையடுத்து ஏற்கெனவே கொலை செய்த சஜிதாவின் கணவரான சுதாகரன் (54) மற்றும் அவருடைய தாயார் லட்சுமி (75) ஆகிய இருவரையும் கடந்த ஆண்டு (2025) ஜனவரி 27-ம் தேதி செந்தாமரை கொடூரமாகக் கொலை செய்தார். இந்த இரட்டைக் கொலை வழக்கில் செந்தாமரை கைதுசெய்யப்பட்டு மலம்புழா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர்மீதான கொலை வழக்கு பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கென்னத் ஜார்ஜ் நேற்று அளித்த தீர்ப்பில் செந்தாமரை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். இந்த வழக்கில் செந்தாமரை மட்டுமே குற்றவாளி ஆவார். இதற்கான தண்டனை விவரம் நாளை (ஜூலை 15) அறிவிக்கப்பட உள்ளது.

அதுல்யா, அகிலா

நேற்று தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தாமரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இது கடுமையான வழக்கு என்பதால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. தீர்ப்பு அறிவிக்கப்படும் முன் ஏதேனும் கூற விரும்புகிறீர்களா? என நீதிபதி கேட்டார்.

அதற்கு, என்னை தூக்கில் போடுங்கள் என்று செந்தாமரை பதிலளித்துள்ளார். எவ்வளவு காலமாக சிறையில் இருக்கிறீர்கள்? என நீதிபதி கேட்டதற்கு, துல்லியமாகத் தெரியவில்லை என்றார் செந்தாமரை. என்ன வேலை செய்து வந்தீர்கள் என்ற கேள்விக்கு, டேங்கர் லாரி ஓட்டுநராக இருந்ததாக தெரிவித்தார் செந்தாமரை.

உங்களுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லையென்று அரசுத் தரப்பு கூறுகிறதே என நீதிபதி கேட்டதற்கு, அவரவருக்கு வரும்போதுதான் அந்த வலி தெரியும் என்றார் செந்தாமரை.

மேலும், நீங்கள் வெளியில் வந்தால் மீண்டும் கொலை செய்ய வாய்ப்புள்ளது என்று வாதிடப்படுகிறதே என நீதிபதி கேட்டதற்கு, நான் ஒன்றும் காந்தி அல்ல. எனக்குக் கிடைத்தால் நானும் திருப்பித் தருவேன் (பழிவாங்குவேன்) எனத் திமிராகப் பதிலளித்துள்ளார்.

கொலைக் குற்றவாளி செந்தாமரை
கொலைக் குற்றவாளி செந்தாமரை

செந்தாமரைக்குக் கண்டிப்பாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சுதாகரனின் மகள்களான அதுல்யாவும் அகிலாவும் கண்ணீருடன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

"நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுக்கும் செந்தாமரையைக் கண்டு எங்களுக்குப் பயமாக இருக்கிறது. நாங்கள் எங்கள் அப்பா, அம்மா, பாட்டி ஆகிய மூவரையும் இழந்துவிட்டோம். அவன் வெளியில் வந்தால் எங்களையும் கொன்றுவிடுவான். அவனுக்கு யாரைக் கண்டும் பயமில்லை" என்று அதுல்யா மற்றும் அகிலா ஆகியோர் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

சஜிதா கொலை வழக்கில் செந்தாமரைக்கு ஏற்கனவே இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.