எந்த மோதலும் இல்லை - ஜானி மாஸ்டர் பதிவு; நடன சங்கப் பஞ்சாயத்தை தீர்த்து வைத்த சிரஞ்சீவி

தெலுங்குத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் சங்கத்தில் சமீபத்தில் ஒரு பிரச்னை.

அந்தச் சங்கத்தின் தலைவர் நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா ஆவார். சங்கத்தில் சில நிர்வாகிகளுக்கான தேர்தலை சங்க உறுப்பினர்களிடம் கலந்தலோசிக்காமல் சுமலதா முடிவு செய்திருக்கிறார்.

இது ஜானி மாஸ்டர் அணிக்கும், இன்னொரு நடன இயக்குநர் ஆன சேகர் மாஸ்டர் அணிக்கும் பிரச்னையாக வெடித்துள்ளது.

இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர நடிகர் சிரஞ்சீவி இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

ஜானி மாஸ்டர் - நடிகர் சிரஞ்சீவி - சேகர் மாஸ்டர்

இது குறித்து ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...

"கடந்த இரண்டு நாள்களாக சில தவறான வீடியோக்களும், பொய் செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

நான் ஒன்றை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனக்கும் சேகர் மாஸ்டர் அண்ணாவிற்கும் இடையே எந்தவொரு கருத்து வேறுபாடோ அல்லது மோதலோ கிடையாது. நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம், எப்போதும் ஒருவருக்கொருவர் துணையாகவே நின்றுள்ளோம்.

இந்த வதந்திகள் பரவிய பிறகு, மெகாஸ்டார் சிரஞ்சீவி காரு படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் நேரில் பேசினார். நாங்கள் அனைவரும் ஒன்றாக நேரம் செலவிட்டோம். மகிழ்ச்சியாகப் பேசினோம். ஒன்றாக மதிய உணவும் சாப்பிட்டோம். அவருடைய அன்பும், வழிகாட்டுதலும், ஆதரவும் எங்களுக்கு எல்லாமே.

தயவுசெய்து யாரும் இத்தகைய ஆதாரமற்ற வதந்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். அன்பு, மரியாதை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் நாம் எப்போதும் ஒன்றாகத் தொடர்ந்து பயணிப்போம்".

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.