குடும்ப சண்டை; மொபைல் போன் கொண்டு தாக்கிய மனைவி - காயமடைந்த கணவர் உயிரிழந்த சோகம்

அன்றாட வாழ்க்கையில் மொபைல் போனின் பயன்பாடு மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. வீட்டில் நடக்கும் பெரும்பாலான சண்டைகள் மொபைல் போன் தொடர்பானதாக இருக்கிறது.

இந்த மொபைல் போனால் கணவன் மனைவி இடையேயும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. ஒடிசாவில் அது போன்ற ஒரு சண்டை விபரீதத்தில் முடிந்துள்ளது. ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தில் உள்ள சிம்னிபதிபாடா என்ற இடத்தில் குடும்பத் தகராறின் போது மனைவி தனது கணவனை மொபைல் போனால் தலையில் தாக்கியதில் கணவர் ஒருவர் உயிரிழந்தார்.

சம்பத்தன்று இரவு குடும்ப பிரச்னையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

வாய்ச்சண்டையில் தொடங்கிய இச்சண்டை பின்னர் அடிதடியில் முடிந்தது. சண்டையில் மனைவி தனது கையில் இருந்த மொபைல் போனால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் கணவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அங்குள்ள மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் ஓரளவு நிலைமை சீரடைந்ததால் கணவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு அவரது நிலைமை திடீரென மோசமடைந்தது. உடனே அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனலிக்காமல் அவர் இறந்து போனார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களிடம் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். மொபைல் போனால் தாக்கப்பட்டதில் கணவர் உயிரிழந்து இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.