`` `கொத்து புரோட்டா என அநாகரிகமாகப் பேசுகிறார்; இது தொடந்தால்..! - ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!
தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``முதல்வர் விஜய் கரூர் சம்பவம் குறித்துப் பேசிய பேச்சுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாகவும், வழக்கைப் பாதிக்கக்கூடிய தன்மையிலும் அமைந்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட எதுவாக இருந்தாலும், இந்த வழக்கை விசாரிக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவிடமே முறையிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தி.மு.க சார்பில் அந்தப் பேச்சுகள் குறித்த முழு விவரங்களையும் அக்குழுவிற்கும், சிபிஐக்கும் அனுப்பியுள்ளோம். அந்த மனுவை சிபிஐக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 10-ம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பல தில்லுமுள்ளுகள் நடந்துள்ளன. முதல்வர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் நாங்கள் ஏற்கெனவே கொடுத்துள்ளோம். வைகோ-வின் அறிக்கை மற்றும் விஜயபாஸ்கர் தானாகவே முன்வந்து செய்தியாளர்களிடம் என்னை த.வெ.க-விற்கு வரும்படி அழைத்ததால் ராஜினாமா செய்கிறேன் என்று கூறிய வீடியோ ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
`கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் என அநாகரிகமாகப் பேசுகிறார். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலையைத்தான் அவர்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விராலிமலை விஜயபாஸ்கர் மற்றும் கரூர் விஜயபாஸ்கர் ஆகிய இருவரையும் விமர்சிக்கின்றனர். முதலமைச்சர் விஜய் கீழ்த்தரமான அரசியல் பேச்சுகளைப் பேசி வருகிறார். அவர் இப்படியே தொடர்ந்தால் நாங்களும் பேசவேண்டி வரும்.
கரூரில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களை அரசு எடுத்துக்கொண்டது போலவும், அது தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் அளிப்பது போலவும், அதை ஏற்று முதல்வர் விஜய், நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது போலவும் 10-ம் தேதி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், 9-ம் தேதியே இதற்கான அரசு ஆணை (GO) வெளியிடப்பட்டுவிட்டது.

ஆளுநரிடமும், உரிய அமைப்புகளிடமும் புகார் அளிப்பது சட்டப்பூர்வ நடவடிக்கைக்கான முதற்படியாகும். நீதிமன்றத்தை நாடும் போது "சம்பந்தப்பட்ட தகுதியான அதிகாரியிடம் புகார் அளித்தீர்களா?" என்று கேள்வி எழுப்புவார்கள். சட்டமன்றத்தின் பாதுகாவலராக ஆளுநர் இருப்பதால் அவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சி அமைந்து சில நாள்களே ஆவதால், ஆளுநருக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தி.மு.க சார்பில் நிச்சயமாக நீதிமன்றத்தின் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்னும் ஆறு மாதங்களில் தி.மு.க ஆட்சி அமைக்கும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார் என்று அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது அவருடைய தனிப்பட்ட ஆசை. அதில் குறுக்கிட விரும்பவில்லை. மாற்றுத் தரப்பினரின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்து அதை நாங்களே பெரிய செய்தியாக்க விரும்பவில்லை. கடந்த தேர்தலைப் போல தேவையற்ற விமர்சனங்களை வளர்க்காமல், தி.மு.க அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணித்து, உரிய நேரத்தில் நேரடி நடவடிக்கைகளை எடுக்கும்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

