``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை - முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.
கரிசல் மண்ணின் யதார்த்த வாழ்க்கையைத் தன் எழுத்துகளால் செதுக்கிய அவரது மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகக் கருதப்படுகிறது. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், முதல்வர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான திரு. பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
திரு. பூமணி அவர்கள் கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி ஆவார். அவரது அஞ்ஞாடி நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாகும்.
மேலும், அவரது வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான அசுரன் திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. திரு. பூமணி அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலக்கியத் துறையில் திரு. பூமணி அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

