வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி - ஓய்வூதியத் தொகையை எடுக்க சென்ற 82 வயது முதியவர் அதிர்ச்சி!
வங்கிகளில் சில நேரம் சாப்ட்வேர் பிரச்னை காரணமாக சிலரது வங்கிக்கணக்கில் அதிக பணம் இருப்பதாக கணக்கு காட்டும். இது போன்று பல முறை நடந்திருக்கிறது.
பீகாரில் 82 வயது முதியவர் வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக கணக்கு காட்டியதைக் கேட்டு முதியவர் அதிர்ச்சியடைந்தார். பீகார் மாநிலம் முஜாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமேஷ்வர் மிஸ்ராவிற்கு முதியோருக்கான ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. அந்த ஓய்வூதியத் தொகையை எடுப்பதற்காக காமேஷ்வர் பொதுச் சேவை மையத்திற்குச் (CSC) சென்றார்.
அவர் தனது ஓய்வூதியத் தொகையை எடுத்த பிறகு தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அவரது வங்கிக்கணக்கில் ரூ.759 கோடி இருப்பதாக அங்கிருந்த ஊழியர் தெரிவித்தார். காமேஷ்வருடன் அவரது மாற்றுத்திறனாளி மகனும் சென்று இருந்தார்.
அவரது மகன் வங்கிக்கணக்கிலும் இதே போன்று அதிக தொகை இருப்பதாகக் காட்டியது. இருவரது வங்கிக்கணக்கிலும் சேர்த்து மொத்தம் ₹1,500 கோடிக்கும் அதிகமாகக் காட்டியது.
இந்த அளவுக்கு அதிக தொகை தங்களது வங்கிக்கணக்கில் இருப்பதாகச் சொன்னதும் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு கணக்கில் வந்தது என்பதைத் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறிய காமேஷ்வர் மிஸ்ரா, இது குறித்து விசாரணை நடத்துமாறு வங்கியையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டார்.
கணக்கு இருப்புகளை அதிகாரிகள் சரிபார்க்கவும், ஏதேனும் பிழை ஏற்பட்டிருந்தால் அதைச் சரிசெய்யவும் ஏதுவாகவே தான் இந்த விஷயத்தை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்த அசாதாரணமான கணக்கு இருப்புகளுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு அல்லது வங்கிச் செயல்முறைப் பிழையின் காரணமாகவே இத்தொகைகள் தோன்றியிருக்கலாம் என்று ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகளோ அல்லது வங்கிப் பிரதிநிதிகளோ இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் பணத்தை எடுக்க முடியாத அளவுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


