பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி.

நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட விடுதியில் கூடியிருந்தனர். நள்ளிரவு சுமார் 11:30 மணியளவில், விடுதியில் திடீரெனத் தீ பிடித்துள்ளது. விடுதிக்குள் தீ வேகமாகப் பரவியதை அடுத்து, அங்கு நின்றிருந்தவர்கள் அலறியடித்தபடி முன்பக்க நுழைவுவாயில் வழியாக வெளியேற முயன்றனர். அப்போது கரும்புகையும் தீப்பிழம்புகளும் கட்டிடத்தை முழுமையாகச் சூழ்ந்துகொண்டன.

பேங்காக் பாரில் பயங்கரத் தீ விபத்து

இந்த விபத்து குறித்த தகவலறிந்து நள்ளிரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 30 நிமிடங்கள் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தீ விபத்து ஏற்பட்டபோது அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த கலைஞர் ஒருவரிடம் பேசினேன்.

மின்சாரக் கட்டுப்பாட்டுக் கருவியில் ஏற்பட்ட தீப்பொறியே இந்த விபத்துக்குக் காரணம் என்று அவர் கூறினார். அதன்பின்னர் வெடிச்சத்தம் கேட்டு, அனைவரும் புகை மற்றும் தீயிலிருந்து தப்பிக்க ஓடியுள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாகப் பலர் வெளியேறும் வழியறியாமல், புகையிலிருந்து தப்பிக்கக் கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள கழிவறைகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டுள்ளனர். அங்குதான் பெரும்பாலான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பயங்கரத் தீ விபத்தில், குறைந்தது 27 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும், பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாக Thairath ஊடகம் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.