பெங்களூரு: ``சில்லறை இல்லை... - அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் சனிக்கிழமை அன்று முகக்கவசம் அணிந்து, சாதாரணப் பயணியைப் போல ரகசிய ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, அவரிடமே நடத்துனர் சில்லறை இல்லை எனக் கூறி பேருந்தை விட்டு இறங்குமாறு கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் பைரதி சுரேஷ் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, 10-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்து இந்த அதிரடி சோதனையை நடத்தினார். அப்போது பயணிகள் தினசரி எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகளை அவர் நேரடியாகக் கண்டறிந்தார்.

அமைச்சர் பைரதி சுரேஷ்

ஆய்வின் ஒரு பகுதியாக, ஹெப்பல் - நாகஷெட்டிஹள்ளி வழித்தடத்தில் சென்ற பேருந்து ஒன்றில் அமைச்சர் பயணம் செய்தபோது, டிக்கெட் எடுப்பதற்காக நடத்துநரிடம் 100 ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளார். ஆனால், அதற்கு சில்லறை இல்லை எனக் கூறிய நடத்துநர், அவருக்கு டிக்கெட் வழங்க மறுத்ததோடு, பேருந்தை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.

தான் அமைச்சர் என்பதை வெளிப்படுத்தாமல், பொதுமக்கள் சில்லறை பிரச்னையால் தினமும் படும் அவதியை அமைச்சர் இதன் மூலம் நேரடியாக உணர்ந்தார்.

இதற்கிடையே, ஃபன் வேர்ல்டு பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவர் இறங்குவதற்கு சிக்னல் காட்டியும், பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் இயக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த அமைச்சர், உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சம்பவ இடத்திலேயே உத்தரவிட்டார்.

பேருந்து பயணத்தை முடித்துக் கொண்டு நாகஷெட்டிஹள்ளி பகுதியில் இறங்கிய அமைச்சர், அங்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தகராறு செய்வதைக் கண்டார்.

அமைச்சர் பைரதி சுரேஷ்
அமைச்சர் பைரதி சுரேஷ்

ஆட்டோ மீட்டரில் 30 ரூபாய் எனக் காட்டிய போதிலும், அந்த ஓட்டுநர் 36 ரூபாய் கேட்டு அடம் பிடித்துள்ளார். உடனடியாக இதில் தலையிட்ட அமைச்சர் சுரேஷ், அந்த ஆட்டோ ஓட்டுநரை எச்சரித்தார்.

இந்த ரகசிய ஆய்வு குறித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர், ``இது பொதுமக்களின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்கான ஒரு கள ஆய்வு. பெங்களூரு நகரின் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தவும், ஊழியர்களிடையே ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வை உருவாக்கவும் இதுபோன்ற அதிரடி சோதனைகள் இனி தொடரும்" என்று எச்சரித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.