தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் எஸ்.ஜானகி மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!

புகழ்பெற்ற பின்னணி பாடகியான எஸ். ஜானகி தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜய் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், `இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

முதல்வர் விஜய்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.

அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் ‘தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்

எஸ். ஜானகி

நடிகர் கமல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘ பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?

இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று கூறியிருக்கிறார்.

கர்நாடக முதல்வர் தனது இரங்கல் செய்தியில் ‘ இந்திய திரையுலகின் ஒப்பற்ற பின்னணி பாடகி, கன்னட திரையுலகின் மேரு கலைஞர், "கானகோகிலா" திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமது குரல் வளத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களின் இல்லங்களிலும் இதயங்களிலும் இடம்பிடித்திருந்த பன்மொழி பாடகி ஜானகம்மாவின் மறைவால் இசை உலகம் மௌனமாகிவிட்டது.

கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

பல பாடகர்களை ஊக்குவித்து வளர்த்தெடுத்த, எளிமையின் வடிவமாக விளங்கிய ஜானகம்மாவின் ஒப்பற்ற குரல் கன்னட நாட்டின் கலாச்சார துறையில் என்றென்றும் அழியாதது. இறைவன் அவரது ஆன்மாவுக்கு நிரந்தர சாந்தி அளிக்கட்டும், அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை வழங்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி’ என்று கூறியுள்ளார்

மறைந்த எஸ். ஜானகி அவர்களின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்துமாறு முதலமைச்சர் டி கே சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.