`தமிழ்நாட்டில் ஒரு வாரம் கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? - வணிகர்கள் கூட்டமைப்பின் தீர்மானம் என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட கோழி வணிகர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. அந்த தீர்மானத்தில், கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பாகவே, அவற்றுக்கு தீவனம் வழங்குவதை பண்ணையாளர்கள் மற்றும் வணிகர்கள் கைவிட வேண்டும். விற்பனைக்கு மிக அருகில் இருக்கும் நேரத்தில் கோழிகளுக்குத் தீவனம் வழங்குவதால், அவற்றின் உடல் எடை செயற்கையாக அதிகமாகக் காட்டப்படுகிறது. இறுதி நேரத்தில் தீவனம் வழங்குவது வெறும் எடை ஏமாற்றுதல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

கோழி இறைச்சி

எனவே, கோழிகள் விற்பனைக்கு வருவதற்கு 15 மணி நேரத்திற்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதை ஒரு கட்டாய வழிகாட்டு நெறிமுறையாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், இதனைச் சட்டமாக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலத்திற்கு கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.