`இன்றைக்கும் அவர் என்னை ஜெயித்துவிட்டார்..!- ஒளிப்பதிவாளர் செழியன் குறித்து விஜய் மில்டன் உருக்கம்
பிரபல ஒளிப்பதிவாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான செழியன் இன்று (ஜூலை 10) காலமானார். தமிழ் சினிமாவின் ஜாம்பவானான ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்து தனது சினிமா பயணத்தைத் தொடங்கியவர், செழியன்.
கல்லூரி, ரெட்டைசுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவு மட்டுமன்றி டூலெட் (To Let) என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.
இத்திரைப்படம் 65-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான உயரிய விருதைத் தட்டிச் சென்றதுடன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுப் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்தது.
இந்நிலையில் இன்று உடல்நலக்குறைவால் செழியன் காலமானார். அவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் வீடியோ பதிவு மூலம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

வீடியோவில் பேசியிருக்கும் அவர், "கான்டக்ட் லிஸ்ட்டில் இனிமேல் எப்போதும் கால் பண்ணவே முடியாத, அதற்காக அந்த நம்பரை அழித்துவிடவும் முடியாத போன் நம்பர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு செழியன். அவரை மாதிரி அறிவார்ந்த ஒளிப்பதிவாளரை நான் பார்த்ததே இல்லை.
கல்லூரி படத்தில் செழியன் தான் ஒளிப்பதிவாளர். அவர் நன்றாகப் பண்ணிவிடுவாரா என்று அவருக்கும், எனக்கும் போட்டி இருந்தது. ஆனால் என்னை மிஞ்சி விட்டார். இன்றைக்கும் என்னை ஜெயித்துவிட்டார். எனக்கு முன்னாடியே அவர் சென்றுவிட்டார். விட்டுவிட மாட்டேன் செழியன்... பின்னாலேயே வருவேன்" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


