போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க AI தொழில்நுட்பம்; அசத்திய ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்!

போக்குவரத்து விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்த சவாலுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மிகக் குறைந்த செலவில் தீர்வு கண்டு அசத்தியுள்ளனர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

போக்குவரத்து விதிமீறல்களைக் கண்டறிந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் காவல் AI என்ற தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க AI தொழில்நுட்பம்

சஜிவ் ஜெஸ், ஹரிஸ், சந்தோஷ் குமார், சக்திவேல் ஆகிய மாணவர்களும், பேராசிரியர் விஜய், தொழில்நுட்ப வழிகாட்டி பினு ஆகியோரும் இணைந்து மொத்தம் 6 பேர் கொண்ட குழு இந்தத் தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு, வரவேற்பைப் பெற்றுள்ள இந்த காவல் AI (Kaaval AI) தொழில்நுட்பத்தின் பின்னணி குறித்தும், அது உருவான விதம் குறித்தும் இத்திட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மாணவர் சஜீவ் ஜெஸ்ஸைவை நாம் தொடர்புகொண்டு பேசினோம்.

நம்மிடம் காவல் AI குறித்து பேசிய அவர், "எங்களது இந்த முயற்சி கடந்த ஜனவரி 19 அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் ஸ்டார்ட்அப் டி.என் இணைந்து நடத்திய காவல் ஹேக்கத்தான் போட்டியில் இருந்துதான் தொடங்கியது.

அந்தப் போட்டியில் நாங்கள் சமர்ப்பித்த ஐடியா நடுவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே, அவர்கள் ஸ்டார்ட்அப் டி.என் மூலம் மாவட்ட எஸ்.பி சாரை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க AI தொழில்நுட்பம்
போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க AI தொழில்நுட்பம்

அதன்படி, ஜனவரி 21 அன்று எஸ்.பி சாரை நேரில் சந்தித்து எங்களது ஐடியாவை விளக்கினோம். அதை ஏற்றுக்கொண்ட அவர், இதைச் செயல்படுத்துவதற்கான முழு வழிகாட்டுதல்களையும் எங்களுக்கு வழங்கினார்.

பின்னர் மார்ச் மாத மத்தியில், எங்கள் கல்லூரியின் (ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி) முழு ஆதரவோடும், எஸ்.பி சாரின் மென்டர்ஷிப் மூலமும் எங்களது தயாரிப்பான காவல் AI (Kaaval AI) சிஸ்டத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தினோம்.

காவல் AI என்பது அடிப்படையில் டிராஃபிக் விதிமீறல்களைக் கண்டறியும் ஒரு அட்வான்ஸ்டு தொழில்நுட்ப அமைப்பு. சாலையில் நடக்கும் விதிமீறல்களைக் கண்டறிந்து, அதன் மூலம் அபராதம் விதிக்க இது உதவும். அரசுத் தரப்பில் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு அடிப்படை தயாரிப்பை, நாங்கள் ஆரம்பத்தில் வெறும் 30,000 ரூபாய் பட்ஜெட்டில் டிசைன் செய்தோம்.

தற்போது இதன் மேம்பட்ட ஹை-எண்ட் வெர்ஷனை உருவாக்கியுள்ளோம். சந்தையில் 7 லட்சம் ரூபாய்க்குச் செய்யப்படும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த சிஸ்டத்தை, நாங்கள் வெறும் 1 லட்சத்தில் முடித்துக் கொடுக்கிறோம். இதில் ஒரு இண்டஸ்ட்ரியல் கிரேடு சிசிடிவி கேமரா, எட்ஜ் AI போர்டு மற்றும் ஒரு எல்.இ.டி பொது விழிப்புணர்வு திரை ஆகிய 3 முக்கிய அம்சங்கள் உள்ளன.

பொதுமக்களே தங்களது தவறை உணர்ந்து விதிமீறல்களைக் குறைக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ஜூன் 9 அன்று இதன் முதல் யூனிட் நாகர்கோவில் கலெக்டரேட் ரவுண்டானாவில் நிறுவப்பட்ட அடுத்த நாளே, டிராஃபிக் விதிமீறல்கள் பெருமளவு குறைந்தன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் மேலும் 10 இடங்களில் இதை நிறுவ மாவட்ட காவல்துறையும், ஆட்சியரும் அனுமதி தந்துள்ளனர். ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியைப் பொறுத்தவரை, மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதில் நிர்வாகமும், பேராசிரியர்களும் எப்போதும் முழு கவனம் செலுத்துகிறார்கள்" என்றார்.

வாழ்த்துகள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.