`கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை..! - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் பேச்சு
கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார்.
இந்தக் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதல்வர் விஜய்க்கு ‘வெள்ளி வாள்’ வழங்கி கௌரவித்தார்.
அதன் பிறகு பேசிய அவர், " மதல்வர் விஜய்யை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே உற்றுநோக்குகிறது. தாத்தா எங்கள் கட்சிக்கு வந்துவிட்டீர்களா? என்று என் பேரன் கேட்கிறார். அதேபோல ரோட்டில் நடக்கும்போது மாமா தளபதி கட்சிக்கு வந்துவிட்டீர்களாமே என்று கேட்கிறார்கள்.
விசில் அடிப்பவர்களை வைத்து கட்சி நடத்த முடியுமா?
அதனால்தான் சொல்கிறேன் இனிமேல் தமிழகத்தில் முதல்வர் விஜய் ஆட்சிதான். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் நம்முடைய முதல்வர். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கட்சியின் தலைவராக வந்த தவெக தலைவர் விஜய் இன்று முதல்வராக வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் புரட்சியை ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியபோது, விசில் அடிப்பவர்களை வைத்து கட்சி நடத்த முடியுமா? எனக் கேட்டார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபோது திரையுலகிலிருந்து வந்தவருக்கு ஆட்சி நடத்த தெரியாது என்றார்கள். அவர் 3 முறை முதல்வராக இருந்தார்.
அதேபோல எம்.ஜி.ஆரின் அன்பும், ஜெயலலிதாவின் வீரமும் ஒன்றுசேர்ந்த தலைவராக முதல்வர் விஜய்யை தமிழ்நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் விடியல் பிறக்கும் என்றார்கள். ஆனால் அவர்களுக்குத்தான் விடிந்தது.
நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்!
இங்கு திரண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல, இனி வரக்கூடிய தலைமுறையும் உங்கள் பின்னால் தான் அணிவகுக்கும். எனவே, இனிமேல் என்றுமே தமிழகத்தில் தளபதியின் ஆட்சிதான்.
திமுகவின் மனக்கோட்டை தகர்ந்தது, புரட்சித்தலைவி அம்மாவின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அதிமுகவில் நாங்கள் எண்ணற்ற தியாகங்களைச் செய்திருக்கிறோம். அவரை கழகத்தின் நிரந்தரப் பொதுச்செயலாளர் என்று சொன்னோம். அதேபோலத்தான் இதே மேடையில் சொல்கிறேன். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் நமது தளபதி தான்!
கடந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில் ‘இனாம் ஒழிப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டு, கோயில் நிலங்களில் குடியிருந்த ஏழை மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை.!
ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த அமைச்சரும், முதல்வரும் அந்த நிலங்களில் வாழும் ஏழை மக்களைச் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கினார்கள்.
குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் தான் இந்த அநீதி அதிகமாக நடந்தது. அங்குள்ள ஏழை மக்களின் வீடுகளைச் சீல் வைப்பது, காலி செய்வது, நிலங்களை அபகரிப்பது போன்ற செயல்கள் அரங்கேறின. இது ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான பிரச்னை.
எனவே, முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் தனி கவனம் செலுத்தி, ஏழை மக்களின் நிலப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், அந்த ஏழை எளிய மக்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கடன் பட்டிருப்பார்கள். கரூர் மாவட்டம் இனி தளபதியின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம் ” என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


