காவிரி : ``நான் அப்படி சொல்லவில்லையே.! - கர்நாடக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில்!
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ``கர்நாடகாவில் போதிய அளவு மழை பெய்யாததாலும், அணைகளில் போதிய அளவு நீர் இல்லாததாலும் தற்போதைய சூழலில் தமிழகத்துக்குக் காவிரி நீரை வழங்கும் நிலையில் நாங்கள் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடக அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``கர்நாடகத்தில் இருந்து தற்போது காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்றும், தமிழகத்திற்கு நீர் வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை யாரும் எங்களிடம் கேட்கவில்லை என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தன் எக்ஸ் பக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு, ``தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடாது" என்று நான் எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
கிருஷ்ணராஜ சாகர் , கபினி, ஹேரங்கி மற்றும் ஹேமாவதி ஆகிய கர்நாடகாவின் நான்கு முக்கிய நீர்த்தேக்கங்களுக்கு மிகக் குறைவான நீர்வரத்து இருப்பதாலும், அந்த அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததாலுமே தற்போதைய சூழ்நிலையில் கர்நாடகாவால் தண்ணீர் திறந்து விட முடியவில்லை.
காவிரி ஒழுங்குமுறைக்குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து முடிவெடுக்கும் தகுதி வாய்ந்த அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை வாரியத்திற்கு மட்டுமே உள்ளது. இதில் கர்நாடக அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை.
கடந்த 30 ஜூன் 2026 நிலவரப்படி, கர்நாடகாவின் நான்கு நீர்த்தேக்கங்களின் மொத்த நேரடி நீர் இருப்பு வெறும் 15.761 டி.எம்.சி மட்டுமே ஆகும். இந்த அளவு, அடுத்த மூன்று மாதங்களுக்கு இம்மாநிலத்தின் குடிநீர் தேவையை நிறைவு செய்யக் கூடப் போதுமானதாக இல்லை.
கடந்த 30.06.2026 அன்று நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறைக்குழு கூட்டம் வரை, இந்த நான்கு அணைகளுக்கும் வந்த ஒட்டுமொத்த நீர்வரத்து 4.05 டி.எம்.சி ஆகும் (பிலிகுண்டுலுவில் 2.915 டி.எம்.சி).

கடந்த 16.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்ற காவிரி ஒழுங்குமுறைக்குழு கூட்டங்களிலும், 23.06.2026 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்திலும் கர்நாடகா தனது நிலையைச் சமர்ப்பித்துள்ளது. அதன்படி பெங்களூரு பெருநகரப் பகுதி, மைசூரு, மாண்டியா, சாமராஜநகர், ராமநகர் மற்றும் பிற நகரங்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நான்கு அணைகளின் நீர் இருப்பைப் பாதுகாப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டங்களில் கர்நாடகா சமர்ப்பித்த இந்த வாதங்களை ஆய்வு செய்த காவிரி நீர் மேலாண்மை வாரியமும், ஒழுங்குமுறைக்குழுவும் பின்வரும் முடிவுகளை வழங்கியுள்ளன.
காவிரிப் படுகையில் தற்போது நிலவும் கடுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், இது ஒரு பற்றாக்குறைப் படுகை (deficit basin) என்பதாலும், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தங்களுக்குக் குறிப்பிட்ட நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைப் பற்றாக்குறையான காலத்திற்கு ஏற்றவாறு மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
குடிநீர்த் தேவை மற்றும் சுற்றுச்சூழல் ஓட்டங்களுக்கு (Environmental flows) மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
கடந்த மே மாத நடுப்பகுதியில் இருந்தே இந்திய வானமைப்புத் துறை, எல்-நினோ தாக்கம் காரணமாக நடப்பாண்டில் பருவமழை தாமதமாகும் என்றும், மழைப்பொழிவு குறையும் என்றும் பல்வேறு நாளிதழ்கள் வாயிலாகத் தெரிவித்து வருகிறது.
இருப்பினும், வரும் நாட்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து, கர்நாடகா மற்றும் தமிழக அணைகளுக்குப் போதிய நீர்வரத்து கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
