சுயதொழில் தொடங்க ஆசையா? - தமிழ்நாடு அரசின் 4 அதிரடி தொழில் மேம்பாட்டுப் பயிற்சிகள் - முழு விவரம்!
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), சென்னை ஈக்காட்டுத்தாங்களில் உள்ள தனது வளாகத்தில், சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக பல்வேறு குறுகிய கால தொழில் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இப்பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திருமணப் புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி
சென்னையில் வரும் ஜூலை 20, 2026 முதல் ஜூலை 24, 2026 வரை 5 நாள்கள் "திருமண புகைப்படம் மற்றும் வீடியோ எடிட்டிங்" குறித்த பயிற்சித் திட்டம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, மேம்பட்ட புகைப்பட நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு, திருமண புகைப்பட வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் வழிகள் ஆகியவற்றுடன் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கப்படும்.
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
ஆபரணத் துறையில் கால்பதிக்க விரும்புவோருக்காக 5 நாள்கள் நடைபெறும் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" ஜூலை 13, 2026 முதல் ஜூலை 17, 2026 வரை நடைபெற உள்ளது. இதில் தங்கம் மற்றும் வெள்ளியின் தரம் அறிதல், கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, போலி நகைகளைக் கண்டறியும் முறைகள், ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள் மற்றும் பொதுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வழிகாட்டல்களும், அரசு கடனுதவித் திட்டங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு (AI) செயலி உருவாக்கம்
தொழில்நுட்பத் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்காக, 3 நாள்கள் முழுநேரப் பயிற்சியாக "செயற்கை நுண்ணறிவுப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்" (AI prototypes/MVP) பயிற்சி ஜூலை 15, 2026 முதல் ஜூலை 17, 2026 வரை நடத்தப்படுகிறது. இதில் ChatGPT, Gemini Pro, NotebookLM போன்ற தளங்களைப் பயன்படுத்துதல், No-Code/Low-Code AI கருவிகள் மூலம் செயலிகளை உருவாக்குதல், மற்றும் வேலைவாய்ப்பு, லிங்க்ட்இன் தளங்களைச் சரியாகப் பயன்படுத்துதல் போன்ற தொழில் முனைவுப் பாதைகள் கற்றுத்தரப்படும்.

சிறுதானிய உணவுப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி
பாரம்பர்ய உணவு வணிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்காக, வரும் ஜூலை 15, 2026 மற்றும் ஜூலை 16, 2026 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் "சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி வகைகளைக் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி" நடைபெறுகிறது. இதில் சிறுதானிய மாவு, பிஸ்கட், முறுக்கு, அவல், வத்தல் வகைகள் தயாரிப்பு, பேக்கிங் மற்றும் பேக்கேஜிங் முறைகள், சந்தைப்படுத்துதல், விலை நிர்ணயம் மற்றும் அரசின் மானியங்கள் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும்.
தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இப்பயிற்சிகளில் பங்கேற்க 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயனாளிகளுக்குக் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் ஆவண செய்யப்பட்டுள்ளது. பயிற்சிகளின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு, வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை 8668102600 / 7806918309 / 8668100181 / 9360221280 ஆகிய எண்களையோ, அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032 என்ற முகவரியையோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
.jpeg?resize=390%2C205)

