தமிழ்நாடு மின்துறையில் நுழையும் AI: சென்னை ஐஐடி-யுடன் கைகோக்கும் மின்வாரியம்! - பலன் என்ன?
தமிழக மின்கட்டமைப்பை தரம் உயர்த்தி, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில், ``தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி, சென்னை மின்வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
மாநிலத்தின் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் பகிர்மானத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு போன்ற அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மின்வாரியத்தில் புகுத்தப்பட உள்ளன. இதன் மூலம், மின்கட்டமைப்பின் செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
முக்கிய அம்சங்கள் மற்றும் பயன்கள்:
பசுமை எரிசக்தி ஒருங்கிணைப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பாதுகாப்பாக மின்கட்டமைப்பில் இணைத்தல் மற்றும் நவீன மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) உருவாக்குதல்.
செலவினச் சிக்கனம்: அனல்மின் நிலையங்களின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும், தொழில்நுட்ப ஆய்வுகள் மூலமும் மின்வாரியத்தின் செலவுகளைக் குறைத்தல்.
டிஜிட்டல் ட்வின் மற்றும் AR/VR: மின்கட்டமைப்பை டிஜிட்டல் முறையில் மாதிரியாக்கம் செய்து, நவீன மெய்நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் மின் விநியோகத்தை மேம்படுத்துதல்.
சிறப்புப் பயிற்சி: மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு எதிர்கால மின்துறை சவால்களை எதிர்கொள்ள ஐஐடி மூலம் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.
மின்சார வாரியத்தின் கீழ் இயங்கும் துணை நிறுவனங்களான TNPDCL, TANTRANSCO, TNPGCL மற்றும் TNGECL ஆகிய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டுச் சவால்களுக்கு, ஐஐடி சென்னை தனது உலகளாவிய அறிவியல் நிபுணத்துவம் மூலம் புதுமையான தீர்வுகளையும், கூட்டு ஆராய்ச்சிகளையும் வழங்கவுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு மக்களுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அளித்த பேட்டியில், ``எனர்ஜி செக்டார் எனப்படும் மின்னாற்றல் துறை தற்போது மிக அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை தமிழக மின்சாரத் துறையில் புகுத்தி, கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம்.
இந்த புதிய திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கப் போகிறது. மின் விநியோகத்தில் கிடைக்கும் கோடிக்கணக்கான தரவுகளைப் பயன்படுத்தி, எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே கணிக்க முடியும். மேலும், புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின் கட்டமைப்புகள் சேதமடையாமல் பாதுகாக்கவும், மின் கசிவு அல்லது மின் தடை ஏற்பட்டால் அதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து சரி செய்யவும் ஏ.ஐ தொழில்நுட்பம் பெரிதும் உதவும்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

