``முதல்வரின் நேரடிப் பொறுப்பு துறையிலேயே ஊழல் நடைபெறுகிறது - சு.வெங்கடேசன் ஆவேசம்!

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம், ``மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக Ourland என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனம் தூய்மைப் பணிகளை முறையாக செய்யாமல், தொடர்ந்து பெரும் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.

முதல்வர் விஜய்

இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகமே எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ள நிலையிலும், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது இதுவரை எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டங்களில் இந்த நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து பலமுறை புகார்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உயர் அதிகாரிகளின் ஆதரவும், மேலே இருப்பவர்களின் பலமான ஆதரவும் அந்த நிறுவனத்திற்கு இருப்பதால்தான், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.

முதலமைச்சரின் நேரடிப் பொறுப்பின் கீழ் வரும் துறையிலேயே இத்தகைய ஊழல் நடைபெறுவது கவலையளிக்கிறது. இவ்வளவு ஊழலில் ஈடுபட்ட நிறுவனத்தின் தூய்மைப்பணி ஒப்பந்தத்தை முதல்வர் விஜய் உடனடியாக ரத்து செய்து, அவர்களை டெர்மினேட் செய்ய வேண்டும். அதுவே மக்களுக்கு வழங்கும் நீதியாக இருக்கும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், தூய்மைப் பணிக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தக் காலம் முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில், மீண்டும் தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.

சு.வெங்கடேசன் எம்.பி.
சு.வெங்கடேசன் எம்.பி.

மீண்டும் தனியாரை இத்துறையில் அனுமதிப்பது தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் வாழும் 5 கோடி மக்களின் வாழ்க்கையைப் பெரும் கேள்விக்குறியாக்கும். எனவே தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.