கர்ப்பம் டு குழந்தை பிறப்பு: உதவும் தமிழக அரசின் சஞ்சீவி மகப்பேறு பெட்டகம் - முழு விவரம்!
கர்ப்பம் - ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல், மனம், ஹார்மோன், வளர்சிதை மாற்றம் என பல மாற்றங்கள் நிகழும் காலம்.
இந்தக் காலத்தில் தாயின் ஆரோக்கியமும், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முக்கியத் திட்டங்களில் ஒன்றுதான் அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பின்னர் அரசின் சஞ்சீவி மகப்பேறு திட்டம் என்ற பெயரில் தொடரப்பட்டது.
கர்ப்பத்தின் முதல் டிரைமஸ்டரிலிருந்து குழந்தை பிறந்த பின்பட்ட பாலூட்டும் காலம் வரை தாய் மற்றும் சேய்க்குத் தேவையான சித்த மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து ஆதரவுகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த திட்டத்தின் சித்த மருத்துவ நன்மைகள் குறித்து விளக்குகிறார் சித்த மருத்துவர் சங்கீதா.
முதல் டிரைமஸ்டருக்கான மருந்துகள்
``கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பொதுவாக குமட்டல், வாந்தி, நெஞ்செரிச்சல், பசியின்மை போன்ற பிரச்னைகள் காணப்படும். இதற்காக கருவேப்பிலைப் பொடி மற்றும் மாதுளை மணப்பாகு வழங்கப்படுகிறது.
மாதுளை மணப்பாகு மாதுளம்பழம், பன்னீர், தேன், கற்கண்டு உள்ளிட்ட பொருள்களால் தயாரிக்கப்படும் சிரப். கர்ப்ப கால வாந்தி மற்றும் குமட்டலைக் குறைப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது. மேலும் இயற்கையான இரும்புச்சத்தையும் வழங்குவதாக சித்த மருத்துவம் கூறுகிறது.
கருவேப்பிலைப் பொடியில் கருவேப்பிலை, உளுந்து, துவரம்பருப்பு, பெருங்காயம், வரமிளகாய் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இது ஜீரணத்தை மேம்படுத்துவதுடன், பசியைத் தூண்டவும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கருவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு இயற்கையான சத்துணவாகவும் பயன்படுகிறது.
இரண்டாவது டிரைமஸ்டரின் முக்கியத்துவம்
நான்காவது மாதத்திற்குப் பிறகு குழந்தையின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும். இந்தக் கட்டத்தில் ஏலாதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், அன்னபேதி மாத்திரை மற்றும் பாவன பஞ்சாங்குல தைலம் வழங்கப்படுகின்றன.
ஏலாதி மாத்திரையில் ஏலக்காய் உள்ளிட்ட ஆறு முக்கிய மூலிகைப் பொருள்கள் இடம்பெறுகின்றன. இது பசியைத் தூண்டுவது, வயிற்று உப்புசம் மற்றும் வாயுத் தொல்லைகளைத் தடுப்பது, ஜீரணத்தை மேம்படுத்துவது போன்ற பணிகளைச் செய்கிறது.

நெல்லிக்காய் லேகியம் வைட்டமின் சி நிறைந்தது. இது தாயின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கக்கூடியதால் நோய் எதிர்ப்புச் சக்தி முக்கியமானதாக கருதப்படுகிறது.
அன்னபேதி மாத்திரை என்பது ஃபெரஸ் சல்பேட் வடிவிலான இரும்புச் சத்து மருந்து. கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் குழந்தையின் வளர்ச்சி பாதிப்பு, குறைந்த எடையுடன் பிறப்பு, கருச்சிதைவு அபாயம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் இரண்டாவது டிரைமஸ்டரிலிருந்து இரும்புச்சத்து வழங்கப்படுகிறது.
மலச்சிக்கலைத் தடுக்கும் பாவன பஞ்சாங்குல தைலம்
சோற்றுக்கற்றாழை, இளநீர் மற்றும் சிற்றாமணக்கெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் பாவன பஞ்சாங்குல தைலம் மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது. இரும்புச்சத்து மாத்திரைகளால் ஏற்படக்கூடிய மலச்சிக்கல், அசிடிட்டி போன்ற பிரச்னைகளை குறைக்க உதவுகிறது. சிறுநீர் எரிச்சல், உடல் உஷ்ணம், மூலச்சூடு போன்றவற்றைக் குறைக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாவது டிரைமஸ்டரில் வழங்கப்படுவது என்ன?
ஏழாவது மாதத்திற்குப் பிறகு குழந்தையின் எலும்பு வளர்ச்சி வேகமாக நடைபெறும். இதனால் தாய்க்கு கால் வலி, இடுப்பு வலி, தசை வலி போன்றவை ஏற்படலாம். இதற்காக பிண்ட தைலம் வழங்கப்படுகிறது.

மேலும் குந்தீரிக தைலம் வழங்கப்படுகிறது. இது பிறப்புறுப்புத் தசைகளின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி சுகப்பிரசவத்துக்கு உதவும் நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. பாவன பஞ்சாங்குல தைலமும் பிரசவம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுகிறது.
பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு
குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்காக சதாவேரி லேகியம் வழங்கப்படுகிறது. சதாவேரி அல்லது தண்ணீர்விட்டான் கிழங்கு பால்சுரப்பை அதிகரிக்கும் மூலிகையாக சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது.
பிரசவத்திற்குப் பிறகு கருப்பை சுருங்கி இயல்பான நிலைக்குத் திரும்பவும், அடிவயிறு வலி குறையவும், கருப்பையில் மீதமிருக்கும் கழிவுகள் வெளியேறவும் அண்ட தைலம் பயன்படுத்தப்படுகிறது.
குழந்தைக்கான உரை மாத்திரை
ஜாதிக்காய், வசம்பு, பூண்டு, பெருங்காயம் உள்ளிட்ட பொருள்களால் தயாரிக்கப்படும் உரை மாத்திரை குழந்தை பிறந்த 90 நாட்களுக்குப் பிறகு தாய்ப்பாலில் இழைத்து நாக்கில் தடவப்படுகிறது. இது குழந்தையின் ஜீரண சக்தி, பசி, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றை மேம்படுத்த உதவுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. சளி, இருமல், வயிற்று உப்புசம், செரிமானக் கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.
இரும்புச் சத்து மற்றும் கால்சியம் எப்போது?
இரும்புச் சத்து மற்றும் கால்சியம் மாத்திரைகளை ஒரே நேரத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

கால்சியம், இரும்புச் சத்தின் உறிஞ்சுதலைக் குறைக்கக்கூடும் என்பதால் மருத்துவர் பரிந்துரைப்படி வேறு வேறு நேரங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும். இரும்புச் சத்துடன் வைட்டமின் சி சேர்த்து எடுத்துக்கொள்வது உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
சித்த மருத்துவக் கருத்துப்படி வாழைக்காய், உருளைக்கிழங்கு, மைதா, கடலைமாவு, அதிக மாவுச்சத்து மற்றும் அதிக இனிப்புச் சத்து கொண்ட சில உணவுகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொள்ளக் கூடாது. இவை ஜீரணக் கோளாறு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கூறப்படுகிறது.
பரிந்துரைக்கப்படும் இயற்கை உணவுகள்
கேழ்வரகு கூழ், முருங்கைக்கீரை சூப், முருங்கை ஈர்க்கு சூப், முளைகட்டிய பாசிப்பயறு, கொண்டைக்கடலை, பீட்ரூட், பொன்னாங்கண்ணி, பசலை உள்ளிட்ட கீரை வகைகள், நீர்த்து காய்ச்சிய பசும்பால், ரசம், மாதுளம்பழம், அத்திப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன. பழங்களை ஜூஸாக அல்லாமல் முழுப் பழமாகவே சாப்பிடுவது சிறந்தது என வலியுறுத்தப்படுகிறது.
ஏன் இந்தத் திட்டம் முக்கியம்?
கர்ப்ப காலத்தில் தாயின் ஊட்டச்சத்து குறைபாடு குழந்தையின் வளர்ச்சியையும், பிறக்கும் எடையையும் பாதிக்கலாம். குறைந்த எடையுடன் பிறப்பு, இரும்புச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு போன்ற அபாயங்களைத் தடுக்க சத்தான உணவு மற்றும் அரசு வழங்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்வது அவசியம்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு, போதிய ஓய்வு, மனஅழுத்தமில்லாத சூழல், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்ற உதவும் குடும்ப ஆதரவு ஆகியவை மிகவும் அவசியம். கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மற்றும் குழந்தையின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த திட்டமாகவே “மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்” பார்க்கப்படுகிறது." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


