``அனுமனாக `ராமபிரான்’ ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம்!’’ - சம்பவம் செய்த தமிழக காங்கிரஸ் அமைச்சர்கள்!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த காங்கிரஸ், அதன்பிறகு ஆட்சியைப் பிடித்த த.வெ.க-வுக்கு ஆதரவு கொடுத்தது. அதற்கு பதிலுதவியாக கிள்ளியூர் தொகுதியின் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாருக்கும், மேலூர் தொகுதியின் எம்.எல்.ஏ விஸ்வநாதனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
அதன் மூலம் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்திருக்கிறது அக்கட்சி. அதையடுத்து அந்த இரண்டு அமைச்சர்களுக்கும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் அவர்களிடம் புதுச்சேரி சார்பில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில், `புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கு தமிழக அரசு விரைவாக நில ஆர்ஜிதம் செய்து கொடுக்க வேண்டும், திருச்செந்தூரில் புதுச்சேரி இல்லம் கட்டுவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும், தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, காவிரி நீரில் 7 டி.எம்.சி புதுச்சேரிக்கு கொடுக்க வேண்டும், சாத்தனூர் மற்றும் வீடூர் அணையில் புதுச்சேரிக்கான நீர் பங்கீட்டின்படி தண்ணீரை கொடுக்க வேண்டும், ஊசுட்டேரியை ஆழப்படுத்தி தூர் வார வேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தன. அதைப்பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் இருவரும்,
``புதுச்சேரியும், தமிழகமும் அண்ணன் தம்பியைப் போன்றது.
அதனால் நீங்கள் கொடுத்த இந்த மனுவை அனுமனாக சுமந்து சென்று, ராமபிரானாக இருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்யிடம் சேர்ப்போம். உங்கள் கோரிக்கைகளை அவர் நிச்சயம் நிறைவேற்றித் தருவார்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பதால், இந்தக் கோரிக்கைகளை தனி கவனம் எடுத்து செய்து தருவார்” என்றனர். அதைக் கேட்ட வைத்திலிங்கம் உள்ளிட்ட புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள், அகமகிழ்ந்து அவர்களை வழியனுப்பி வைத்தார்கள்.
அதன்பிறகு அலுவலகத்தில் வந்து அமர்ந்த வைத்திலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள், `புதுச்சேரி அரசால் முடியாததை நாம் செய்யப் போகிறோம். நம் கட்சியின் தமிழக அமைச்சர்கள் அதை செய்து முடிப்பார்கள்.

அதற்கு நாம் கண்டிப்பாக தனி விழாவை எடுக்க வேண்டும்’ என்று மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். அப்போது தமிழக அமைச்சர்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்த ஒரு பேப்பரை எடுத்துப் பார்த்த அவர்கள், நொந்து போனார்கள்.
அது தமிழக அமைச்சர்களிடம் புதுச்சேரி காங்கிரசார் கொடுத்த கோரிக்கை மனு. அனுமனாக சுமந்து செல்வோம் என்று கூறிய தமிழக அமைச்சர்கள், அந்த மனுவை அங்கேயே வீசிவிட்டுச் சென்றிருந்தனர். அதில் ஏகத்துக்கும் அப்செட்டாகிக் கிடக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


