கரூர் துயரம்: இழப்பை ஈடுகட்ட வேண்டியது தவெகதான்; அரசு அல்ல- அரசுப் பணிக்கு சிபிஐ எம்.பி. எதிர்ப்பு
நாளை (ஜூலை 10) கரூர் செல்லும் முதல்வர் விஜய், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் முடிவை தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் சமூக வலைத்தளப் பதிவில், "அரசியல் கட்சிகளால் ஏற்பாடுசெய்து நடத்திய கூட்டங்களில் கூட்டநெரிசல்களில் ஏற்படும் மரணங்களுக்கு, அரசு வேலை வழங்கும் முடிவு கடுமையான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
இந்த முடிவை அதிகாரத் துஷ்பிரயோகம் என்றே வரலாறு பதிவு செய்யும். மேலும் எதிர்காலத்தில் அரசிற்குக் கடும் நெருக்கடிகளை இந்த முடிவு ஏற்படுத்தும். இழப்பை ஈடுகட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சார்ந்ததாகும்.

அவைதான் அதைச் செய்ய வேண்டும். அதைச் செய்வதற்கு முழுத்தகுதி படைத்த கட்சிதான் தவெக. அந்தப் பொறுப்பை நிறைவேற்றி முடிக்காமல் தட்டிக் கழித்துவிட்டு, அதை அரசின் தலையில் சுமத்துவதை ஜனநாயக அரசியல் அமைப்பு ஏற்காது. தவெக அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

