முதல்வர் விஜய் கரூர் விசிட்; இறந்த 41 பேர் குடும்பங்களுடன் சந்திப்பு... அரசு பணி? பிரமாண்ட கூட்டம்!

தமிழக முதல்வரும், த.வெ.க தலைவருமான ஜோசப் விஜய், வருகின்ற 10-ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக த.வெ.க மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்தப் பயணத்தின் போது, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

inspection

இந்த நிகழ்ச்சிக்காக கரூர், வெண்ணைமலை அடுத்துள்ள அட்லஸ் கலையரங்க மைதானத்தில் பந்தல் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, த.வெ.க தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின் படி 5,000 பேர் பங்கேற்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் 5,000 பேர் பங்கேற்கும் வகையிலான ஏற்பாடுகளே செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளில் பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அன்பு, காவல்துறை உயரதிகாரிகளுடன் பார்வையிட்டார். அப்போது, கட்சி நிர்வாகிகள் சார்பாக மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மைதானத்தில் 5,000 பேர் பங்கேற்கும் வகையிலான பந்தல் அமைத்தல், மக்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை விளக்கிக் கூறினர்.

ஆய்வு

முன்னதாக, கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுதாரர்கள் சிலருக்கு முதல்வர் விஜய் அரசு வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி, அரசு நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏற்கெனவே ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 41 பேர் பலியான சம்பவம், தமிழக அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் சூழலில், முதல்வர் ஜோசப் விஜய்யின் கரூர் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.