``4 மடங்கு உயரும் மருத்துவக் கட்டணம்: 650 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகும்..! - அண்ணாமலை
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" அந்தஸ்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, சாதாரண கல்லூரிகள் ஏதேனும் ஒரு அரசுப் பல்கலைக்கழகத்துடன், உதாரணமாக: மெட்ராஸ் பல்கலைக்கழகம் அல்லது எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்டு, அந்தப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மற்றும் தேர்வுகளையே பின்பற்ற வேண்டும். ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறும் நிறுவனங்கள், ஒரு தனிப் பல்கலைக்கழகத்தைப் போலச் செயல்படலாம்.
அரசுப் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கட்டணங்கள் அரசால் முறைப்படுத்தப்படும். ஆனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறும்போது, நிர்வாகக் குழுவே கட்டணத்தை நிர்ணயிப்பதால் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர வாய்ப்புள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்கள் இந்த அந்தஸ்தைப் பெறும்போது, அவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விலகுகின்றன. இதனால், மாநில அரசு மாணவர்களுக்காக ஒதுக்கும் இடங்கள் (State Quota) குறைந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு (7.5% போன்றவற்றுக்கு) பாதிப்பு ஏற்படும்.
இது தொடர்பாக We The Leaders அமைப்பின் அண்ணாமலை, தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள், தற்போது "நிகர்நிலைப் பல்கலைக்கழகம்" (Deemed University) அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், இந்தக் கல்வியாண்டிலேயே 650 மருத்துவக் கல்வி இடங்கள் மாநில ஒதுக்கீட்டிலிருந்து விலகியிருப்பது, மிகவும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஆகும். இதனால், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவோடு இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களே முதலில் பாதிக்கப்படுவார்கள். மேலும், இந்தக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், குறைந்தபட்சம் நான்கு மடங்கு உயரக்கூடும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றுள்ள கல்லூரிகளான, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி (250 இடங்கள்) மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் & சீனிவாசன் மருத்துவக் கல்லூரி (400 இடங்கள்) ஆகிய கல்வி நிறுவனங்களை யார் நடத்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், இந்த மூன்று கல்லூரிகளுக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெறுவதற்காக எந்தவிதமான தடையில்லாச் சான்றிதழையும் (NOC) வழங்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்ட மறுப்புக் கடிதம் குறித்தான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு, UGC (Institutions Deemed to be Universities) Regulations, 2022-இன் 5.02(i) மற்றும் 5.02(ii) விதிகளின்படி, இணைப்புப் பல்கலைக்கழகம் 60 நாட்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மாநில அரசுக்கும் இணைப்புப் பல்கலைக்கழகத்திற்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு கருதி, நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்க முடியும். இந்நிலையில், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி இரண்டுக்கும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

எனவே, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரியின் விண்ணப்பத்தை முந்தைய திமுக அரசு, 60 நாள் காலக்கெடு முடியும் வரை திட்டமிட்டு கண்டுகொள்ளாமல் இருந்ததா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. இந்த விவகாரம் குறித்து தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்வியை குறைந்த கட்டணத்தில் பெற வேண்டும் என்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவை, எதிர்காலத்தை, நிர்வாக அலட்சியம் மற்றும் யாருடைய சுயநலத்துக்கும் பலிகடாவாக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

