`ஆங்கிலம் தான் அறிவா? ஏன் இதுவரை Last Bench ஸ்டூடென்ட் முன்னேறியதே இல்லையா அமைச்சர் கீர்த்தனா?
"இவங்க கிட்ட சிம்பிளா, What is your Father?ங்கற தான் கேட்டோம். ஆனா, அதுக்குமே அவங்களால பதில் சொல்ல முடியல...
(ஃபர்ஸ்ட் பெஞ்சில் அமர்ந்திருக்கும் அந்த மாணவியிடம் What is your name?, What is your Fathers name?, What is your Fathers Profession? போன்ற கேள்விகளை ஆசிரியர் கேட்கிறார். அதற்கெல்லாம் அந்த மாணவி பதில் சொல்கிறார்)
இதுவே Last Bench ஸ்டுடென்ட் கிட்ட கேளுங்க..."
இது தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது நடைபெற்ற காட்சிகள்.
இது இந்த வீடியோ தான் என்று சொல்வதற்கு முன்பே, முதல் வரியிலேயே, இந்த வீடியோ எது என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள். வீடியோ அந்த அளவிற்கு வைரலாகி இருக்கிறது. அமைச்சர் கீர்த்தனாவிற்கு எதிராக விமர்சனங்களும், கேள்விகளும் வலுத்துக்கொண்டே வருகிறது.
எதிர்ப்புகளுக்கும், கண்டனங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக கீர்த்தனா, "நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்" என்று ஒரு எக்ஸ் பதிவிலும்...
இன்னொரு எக்ஸ் பதிவில், "நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், கீர்த்தனாவின் ஆய்விற்கும், பதிவுகளுக்கு நிறைய பதில்கள் சொல்ல வேண்டியிருக்கிறது... நிறைய கேள்விகளும் கேட்க வேண்டியிருக்கிறது.
ஒரு அமைச்சர் தன் சொந்த தொகுதியில் உள்ள ஒரு பள்ளியை ஆய்வு செய்வது அவரது கடமையும், உரிமையும் தான். மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்கிற அவரது எண்ணத்திற்கு பாராட்டுகளும் கூட.
ஆனால், அந்தச் சூழலை எப்படி கையாண்டார் என்பதற்காகவே கீர்த்தனா விமர்சிக்கப்படுகிறார் என்பதை அவர் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
பெரும்பாலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் முதல் ஆங்கிலக் கேள்வி, What is your Name?... My Name is... என்பது தான்.
ஆனால், இதே கேள்வியைக் காலேஜிலோ, ஆபீசிலோ, பிசினஸிலோ கேட்கப்படும் போது, I am... என்று பதில் மாறிவிட வேண்டும். I am... என்று நாம் மாறும் போதே, புரொஃபஷனலாக மாறுகிறோம் என்று பொருள்.
சின்ன வயதிலேயே, I am... என்று சொல்லி தந்திருக்கலாமே என்கிற கேள்வி எழலாம். கேள்வி நியாயமானது தான். இங்கே Keywords முக்கிய பங்காற்றுகிறது.

பெரியவர் ஆனதும் சில விஷயங்களை சொல்லாமல் கூட புரிந்துகொள்ள முடியும். ஆனால், சிறு வயதில், பள்ளிக் காலங்களில் அப்படி இல்லை.
என்ன கேட்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள, நம்முடைய மூளை Keywords-ஐ கவனிக்கும். அதனால் தான், What is your name? என்று கேட்கப்படும் போது, Name என்கிற கீவேர்டை நம் மூளை எடுத்துகொண்டு, பதிலாக, My name is... என்று நம்முடைய மூளை பதில் சொல்லும்.
கீர்த்தனா கேட்ட கேள்வியில் அந்த கீவேர்ட் மிஸ்ஸிங். அதனால், அந்த மாணவி பதில் சொல்ல தடுமாறி இருக்கலாம். ஆனால், அவருடைய ஆசிரியர் What is your Fathers Profession? என்று கேட்ட உடன், அந்த மாணவி Fathers Profession என்கிற கீவேர்டை அழகாக எடுத்துகொண்டு பதிலளிக்கிறார்.
இடம், பொருள், ஏவல் என்று தமிழில் சொல்லப்படுவது உண்டு. அமைச்சர் கீர்த்தனா பன்னாட்டு நிறுவனத்திற்கோ, ஐ.டி. கம்பெனிக்கோ ஆய்வுக்கு செல்லவில்லை.
அவர் சென்றதோ, அரசு பள்ளிக்கு. அதனால், அவர் அந்த இடத்தை அறிந்து, மாணவியிடம் கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

அது தெரியாமல், இயல்பாக அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டீர்கள். அத்தோடு அந்த மாணவிக்கு பதிலை சொல்லி தந்துவிட்டோ அல்லது கேள்வியை விளக்கிவிட்டு சில நிமிடங்கள் பேசிவிட்டு வகுப்பறையில் இருந்து கிளம்பியிருக்க வேண்டும்.
வகுப்பறைக்கு வெளியே தான் ஆசிரியரிடம் சிம்பிளான கேள்வியைக் கூட மாணவர்களால் பதில் அளிக்க முடியவில்லையே என்று கேட்டிருக்க வேண்டும். அதுதான் சரியானது.
அத்தனை மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை நிற்க வைத்துவிட்டு, நீங்கள் அவ்வளவு பேசும் போது, அந்த மாணவி அடுத்து சக மாணவர்களை எப்படி எதிர்கொண்டிருப்பார்.
இந்த வீடியோ இப்போது வைரலாகிவிட்டது. என்ன தான் வீடியோ blur செய்து பகிரப்பட்டாலும், அங்கே இருக்கும் மாணவர்களுக்கு நிச்சயம் அந்த மாணவி யார் என்று தெரியும்.
அங்கிருக்கும் மக்களுக்குமே அந்த மாணவி யார் என்று தெரியும். அப்போது அந்த மாணவியும், அவரது பெற்றோரும் எப்படி சமூகத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள்.
தட்டிக் கொடுத்து, மாணவர்களை முன் நகர்த்தி செல்ல வேண்டிய ஒரு நபரே அந்த சிறு உள்ளத்தில் அவ நம்பிக்கையை விதைக்கலாமா?

நீங்கள் அரசு பள்ளி மாணவி என்று சொல்கிறீர்கள். அப்போது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாதா... அதை நீங்கள் எப்படி சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும்.
ஆய்வுக்கு சென்ற இடத்தில், மாணவர்கள் ஆங்கிலத்தில் தடுமாறுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரிய வருகிறது. நீங்கள் இரண்டாவது பதிவில் குறிப்பிட்டிருப்பது போல, சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கிலம் நன்கு படிக்க, பேச, எழுத தெரிவது போன்ற திட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்திருக்கலாம்.
இது அனைத்தை விடவும் முக்கியம், ஆங்கிலம் என்பது மொழி... அறிவு இல்லை. அதை கற்றுகொள்ள முடியும் தான். அந்த மாணவியால் பதிலளிக்க முடியாததை நீங்கள் வெறும் மொழியாக கடந்திருந்தால், இந்தப் பிரச்னையே நடந்திருக்காது. இதை நீங்கள் அறிவாக பார்த்ததில் தான் சிக்கல்.
இதுவே Last Bench ஸ்டுடென்ட் கிட்ட கேளுங்க... என்கிற உங்கள் வார்த்தைகளுக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானி அப்துல் கலாமின் ஒரு பொன்மொழியைச் சொல்ல விரும்புகிறேன்.
"தேசத்தின் மிகச்சிறந்த மற்றும் திறமை மிக்க மூளைகள், பள்ளியறையின் கடைசி பெஞ்சில் தான் இருக்க வாய்ப்பு அதிகம்." - இது அப்துல் கலாமின் வார்த்தைகள்.

கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்றாலே, அவர்களுக்கு எதுவும் தெரியாதா என்ன? இதுவரை எந்தக் கடைசி பெஞ்ச் மாணவரும் முன்னேறியதே இல்லையா என்ன?
அமைச்சர் என்கிற பொறுப்பு கையில் இருக்கும் போது, ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு செயலிலும் கவனமும், சமயோசிதமும் வேண்டும்.
இதுவரை எந்த அமைச்சரும் தவறாக பேசியதே இல்லையா என்று கேட்கிறீர்களா... பேசியிருக்கிறார்கள் தான். அவர்கள் பேசினார்கள் என்று நீங்களும் அப்படியே பேச வேண்டியது இல்லையே.
மாற்றம் என்ற சொல்லை முன்னெடுத்து தானே... நீங்கள் பதவிக்கு வந்துள்ளீர்கள். அப்போது ஏன் அந்த மாற்றத்தை தொடங்கும் ஆரம்பப் புள்ளியாக நீங்கள் இருக்கக் கூடாது.
ஏற்கெனவே, நீங்கள் கோவை சிறுமி குறித்த கேள்விக்கு, நீங்கள் சிரித்ததே பெரும் கண்டனத்துகுரியதாக மாறியது. அதன் பிறகு, நீங்கள் ஒரு சூழலை இப்படி கையாண்டிருப்பது மிக மிக தவறு.
தவறு ஒரு முறை நடக்கலாம். ஆனால், அது தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால், என்ன செய்வது? இன்னும் எத்தனை சம்பவங்களுக்குப் பிறகு, நீங்கள் பாடம் கற்று கொள்வீர்களா அமைச்சரே?
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


