ரஷ்யா - உக்ரைன் போர்: 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்த எனக்கு இதை நிறுத்துவது ஈசி - ட்ரம்ப்
ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 4, 2026), அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் போர் குறித்து போன் காலில் பேசிக்கொண்டனர்.
அதன் பின்னும், ரஷ்யா, உக்ரைன் போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகையில் ட்ரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, அவரது பதில்...
"இந்தப் போரை முடிக்க வேண்டும் என்று புதினும் விரும்புகிறார். உக்ரைனும் விரும்புகிறது. நாம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்... இதை நம்மால் முடிவுக்குக் கொண்டுவர முடிகிறதா என்று பார்ப்போம். இது ஒரு கொடூரமான விஷயம்.
நான் ஏற்கனவே 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். என் கணிப்புப்படி, இந்தப் போரை முடிப்பது அதைவிட எளிதான ஒன்றாகத்தான் இருக்கும். ஏன்னென்றால், எனக்கு இரண்டு நாட்டுத் தலைவர்களையுமே நன்றாகத் தெரியும்.
நான் முன்பு முடிவுக்குக் கொண்டுவந்த மற்ற போர்களில் இருந்த பல நாட்டுத் தலைவர்களை எனக்கு அவ்வளவாகத் தெரியாது.
நான் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளுக்கு இடையே வரவிருந்த போர்களைத் தடுத்து நிறுத்தினேன். அது உண்மையிலேயே அணு ஆயுதப் போராக மாறியிருக்கக்கூடிய ஒரு மோசமான சூழல்.
பாகிஸ்தான் பிரதமரே கூறியது போல, ஒருவேளை அந்தப் போர் நடந்திருந்தால் கிட்டத்தட்ட 40 மில்லியன் அல்லது 50 மில்லியன் (4 முதல் 5 கோடி) மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
ஆனால், இந்த உக்ரைன் போரைப் பொறுத்தவரை, மக்கள் நினைப்பதை விட நாம் தீர்வுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்.

அதிபர் புதின் இதை முடிக்க விரும்புகிறார் என்பதை நான் மிகவும் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அது ஒரு நல்ல உரையாடலாக இருந்தது.
இப்போது அதிபர் ஜெலென்ஸ்கியும் கூட இதை முடிக்கத்தான் விரும்புகிறார். நாம் அடுத்து நேட்டோ மாநாட்டிற்குச் செல்லவிருக்கிறோம். அங்கு இதைப் பற்றிப் பேசி ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று நம்புகிறேன்".
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


