15 ஆண்டுகளுக்குப் பின் யானைத் தந்தங்களைப் பிரகடனம் செய்த மோகன்லால்; எத்தனை கிலோ? எத்தனை தந்தங்கள்?
மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் மோகன்லால், தன்னிடம் முறைப்படியான அனுமதியின்றி இருந்த 10 யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்த விக்கிரகங்களை கேரளா வனத்துறையிடம் தற்பொழுது பிரகடனம் செய்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு கொச்சியின் தேவாரா பகுதியில் உள்ள நடிகர் மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்களைத் தேடிச் சென்ற அதிகாரிகளுக்கு, அங்கு பழங்காலத்துச் சொத்துகள் போல காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்களும், தந்தத்திலான கலைப்பொருட்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
உரிய அரசு சான்றிதழ்கள் இன்றி யானைத் தந்தங்களை வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன்கீழ் அவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு முதன்முதலில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மோகன்லால் பெரும்பாவூர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரளா உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
அதே நேரத்தில், தம்மீதான புகார்களுக்குப் பதிலளித்த மோகன்லால், இயற்கையான காரணங்களால் உயிரிழந்த ஒரு வளர்ப்பு யானையிடம் இருந்து பெறப்பட்ட தந்தங்களே அவை என்றும், அவற்றை நினைவாக மட்டுமேதான் வீட்டில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், இவற்றை வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு நிலுவையில் இருந்தபோதே, கடந்த 2015-ம் ஆண்டு தன்னிடம் உள்ள தந்தங்களை முறைப்படி பிரகடனப்படுத்த மோகன்லாலுக்கு மாநில அரசு அனுமதி வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டான 2016-ல் இவற்றுக்கான அதிகாரப்பூர்வ உரிமச் சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், நடிகர் மோகன்லால் மீதான வழக்கு சில ஆண்டுகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
உரிமச் சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, தன் மீது தொடரப்பட்ட அசல் வழக்கை முற்றிலும் வாபஸ் பெறுமாறு 2016 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் மோகன்லால் அரசுக்கு அடுத்தடுத்து கோரிக்கைகளை விடுத்தார்.
தன்னிடம் உள்ள தந்தங்கள் மற்றும் விக்கிரகங்கள் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டவை என்றும் அவர் வாதிட்டார். ஆனால், நீண்ட பரிசீலனைக்குப் பிறகு, கடந்த 2023-ஆம் ஆண்டு மோகன்லாலின் இந்தக் கோரிக்கை மனுக்களை அரசு தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், மோகன்லாலுக்கு உரிமச் சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் கேரளா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். இதனால் 2011 முதல் நீடித்து வந்த சட்டப் போராட்டம் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட உரிமச் சான்றிதழ்கள் சட்டப்படி செல்லாது என்று அதிரடி தீர்ப்பளித்தது. அதே சமயம், இந்த விவகாரத்தில் நடிகரை உடனடியாகத் தண்டிக்க உத்தரவிடாத நீதிமன்றம், இதுகுறித்து புதிய அறிவிப்பை வெளியிடுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வனத்துறையின் பொது மன்னிப்புத் திட்டத்தின் (Amnesty Scheme) கீழ் மோகன்லால் தற்பொழுது தன்னிடம் உள்ள பொருட்களைப் பிரகடனம் செய்துள்ளார்.
இத்திட்டத்தின்படி, சட்டவிரோதமாக வைத்துள்ள வனவிலங்குப் பொருட்களைத் தாமாக முன்வந்து தெரிவிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

இதில் ஆச்சரியமளிக்கும் விதமாக, 2011-ல் ஆரம்பத்தில் கூறப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலாக 6 தந்தங்கள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 10 யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்த விக்கிரகங்கள் தன்னிடம் இருப்பதாக கொச்சி மலையாற்றூர் வனத்துறை அலுவலகத்தில் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
அவர் ஒப்படைத்துள்ள பொருட்களில் கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுள்களின் தந்தத்திலான சிலைகளும் அடங்கும். இவற்றின் மொத்த எடை சுமார் 46 கிலோ கிராம் ஆகும். தன்னிடம் உள்ள பெரும்பாலான தந்தங்கள் பாரம்பர்யமாகத் தனக்குக் கிடைத்தவை அல்லது பரிசாகப் பெறப்பட்டவை என்று மோகன்லால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தத் தந்தங்கள் மற்றும் சிலைகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வனத்துறை அதிகாரிகள் டிஎன்ஏ பரிசோதனை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


