தஞ்சாவூர்: நெல் மூட்டைகள் சரிந்து பெண் பணியாளர் பலியான சோகம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
தஞ்சாவூர் அருகே உள்ள ஆர்சுத்திப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது.
இந்தக் கிடங்கில் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நெல் சேமிப்புக் கிடங்கில் இன்று வழக்கம் போல் தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மனைவி சின்னப்பொண்ணு(51), சகுந்தலா ஆகியோரும் தற்காலிக ஊழியராகப் பணிபுரிகின்றனர்.
இவர்களும் நெல் மூட்டைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் திடீரென் சரிந்து விழுந்தன. பணி செய்து கொண்டிருந்த சின்னப்பொண்ணு, சகுந்தலா மீது நெல் மூட்டைகள் விழுந்துள்ளன.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தினர். இதில் சின்னப்பொண்ணு மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். பலத்த காயம் அடைந்த சகுந்தலாவை சகப்பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆர்சுத்திப்பாடு கிராமத்திலும் விவசாயிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சின்னப்பொண்ணு குடும்பத்திற்கும், காயம் அடைந்த சகுந்தலாவிற்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

