த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! - FIRல் அதிர்ச்சி தகவல்?
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த வழக்கு தொடர்பாக இருவருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர்கள் நேரில் ஆஜராகாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் IPDS நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் மற்றும் கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய தொடர்புடையவர்களாகக் கூறப்படும் கார்த்திக் ரமேஷ் உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு
இந்த வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் மொத்தம் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிவு 8 - ஊழல் தடுப்புச் சட்டம், 1988:
அரசு அதிகாரிகளிடம் முறையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி லஞ்சம் வழங்குதல் அல்லது அதற்கான ஆதரவை நாடுதல்.
பிரிவு 12 - ஊழல் தடுப்புச் சட்டம், 1988:
அரசு ஊழியரை லஞ்சம் பெற தூண்டுதல் அல்லது அதற்கு உடந்தையாக இருப்பது.
BNS 61(2)(a):
குற்றச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக செயல்படுதல்.
BNS 351(3):
கொலை மிரட்டல் உள்ளிட்ட கடுமையான அச்சுறுத்தல் விடுத்தல்.
இந்த பிரிவுகளின் கீழ் திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக் குமார் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி, அசோக்கிற்கு சம்மன்
வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் இருவருக்கும் எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
எனினும், திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசாரணைக்கு இருவரும் ஆஜராகவில்லை.
FIR-ல் இடம்பெற்றுள்ள பரபரப்பு குற்றச்சாட்டுகள்
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெற்றுள்ள தகவல்களின்படி, கடந்த ஜூன் 26-ஆம் தேதி திருநாவுக்கரசு என்பவர் தன்னை கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்துபவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு த.வெ.க. எம்.எல்.ஏ. ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
முதலில், “ஒரு முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் பேசுகிறேன்” என தெரிவித்த அவர், பின்னர் நேரில் சந்திக்க முயன்றதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த பின்னரும் தொடர்ந்து வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று இரவு நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலில், “இந்த அரசு நீண்ட நாட்கள் நீடிக்காது. நீங்கள் ஒத்துழைத்தால் உங்களுக்கும் லாபம், எங்களுக்கும் லாபம்” என பேசியதாகவும், “ஏற்கனவே ஒரு ரிப்போர்ட்டர் இதுகுறித்து உங்களிடம் பேச முயன்றபோது நீங்கள் பிடிகொடுக்காமல் விலகிச் சென்றதாக கேள்விப்பட்டேன்; அதனால் நானே பேசுகிறேன்” என கூறியதாகவும் FIR-ல் பதிவாகியுள்ளது.
“35 கோடி தருவோம்; ராஜினாமா தேவையில்லை”
புகாரின்படி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.விடம் “35 கோடி ரூபாய் வரை வழங்கப்படும். நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. சபாநாயகர் மீதான தீர்மானம் வரும் போது நாங்கள் சொல்வது போல செயல்பட்டால் போதும்” என்று கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “நீங்கள் சம்மதம் தெரிவித்தால், அந்த முக்கிய கட்சியின் சார்பில் நரேஷ், கிருஷ்ணன் மற்றும் அசோக் குமார் ஆகியோர் உங்களை நேரில் சந்திப்பார்கள். அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்” என கூறியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“குடும்பத்துடன் உயிரோடு இருக்க மாட்டீர்கள்” என மிரட்டல்?
அதே உரையாடலின் போது, “இந்த அரசு நீண்ட காலம் நீடிக்காது. எங்களின் ஆதரவில்தான் நீங்கள் இருக்க வேண்டும். நான் சொல்வது போல நடக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த உரையாடலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது. சொன்னால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உயிருடன் இருக்க மாட்டீர்கள்” என மிரட்டியதாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தற்போது தமிழ்நாடு அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் விசாரணைக்கு ஆஜராகாதது தொடர்பாக காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


