’தவெக அரசின் குளறுபடிகளால் நீதித்துறை ஸ்தம்பித்துள்ளது!’ – அதிமுக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக கோவையை சேர்ந்த அ.தி.மு.க வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “த.வெ.க. அரசினால் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இது இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றில் நடக்காத விஷயம். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஆளுங்கட்சி சார்ந்த வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம்தான். அதற்கான முழு உரிமையும் அரசிற்கு உள்ளது.  

அதேசமயம் கடந்த காலங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது புதிய அரசு வழக்கறிஞர் பதவியேற்கும் வரை, பழைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பு வழங்குவது வழக்கம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க 6 மாதகாலமானது. அதுவரை அ.தி.மு.க-வை சேர்ந்த அரசு வழக்கறிஞர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால் த.வெ.க. அரசு கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பும் வழங்கவில்லை, அதற்கான மாற்று ஏற்பாடுகளையும் செய்யவில்லை.

கோபால கிருஷ்ணன்

இதனால் அரசு வழக்கறிஞர்களே இல்லாமல் நீதிமன்றம் நடக்கிறது. அரசாங்கம் என்பது யார் இருந்தாலும் இல்லையென்றாலும் இயங்க வேண்டும். அரசு வழக்கறிஞர் என்பது நீதிமன்றத்தின் உயிர்நாடி. ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் பிணை வழங்குதல், வழக்கு நடத்துதல் போன்ற நீதிமன்ற பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நீதித்துறை ஸ்தம்பித்துள்ளது.

புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் குளறுபடிகள் நடந்துள்ளன. புதிதாக நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுகான நியமன ஆணை இன்னும் வந்து சேரவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து போன் மூலம் 24 வழக்கறிஞர்களை நியமித்து இருப்பதாகவும், அவர்களை பதவியேற்குமாறும் கூறியுள்ளனர். இதில் வழக்கமான நடைமுறைகள் எதுவும் பின்பற்றவில்லை. பணி நியமன ஆணை இல்லாமல் அரசு வழக்கறிஞர்கள் ஆஜரானது இல்லை. இதனை மீறி பணி நியமன ஆணை இல்லாமல் அரசு வழக்கறிஞர்களாக பதவியேற்பது சட்டவிரோதம். இது தொடர்பாக மாவட்ட நீதிபதியை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.