காமேனியின் இறுதிச் சடங்கிலேயே ஈரான் தலைவர்களை ஒழித்துவிட முடியும்- ட்ரம்ப் பேச்சு; ஈரான் பதிலடி!
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில், கடந்த பிப்ரவரி 28-ம் தேதி உயிரிழந்தார் ஈரானின் உச்சத் தலைவர் காமேனி.
இவரது இறுதிச்சடங்கு ஈரானில் நேற்று (ஜூலை 4, 2026) முதல் ஜூலை 9-ம் தேதி வரை ஈரானில் நடைபெற்று வருகிறது.
இந்த இறுதிச்சடங்கில் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலியும், மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.
இறுதிச் சடங்கு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் Axios செய்தி நிறுவனத்திற்கு கொடுத்துள்ள போன்கால் பேட்டியில், "அவர்கள் (ஈரானின் முக்கிய தலைவர்கள்) அனைவரும் அங்கேதான் இருக்கிறார்கள்.
ஒரே ஒரு தாக்குதலில் நாம் அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட முடியும்.
ஆனால், நாம் அதைச் செய்யப் போவதில்லை. ஏனெனில், அதற்குப் பிறகு நாம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கே எவருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இப்போது ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வதற்காகக் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.
ட்ரம்பின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்மீனியாவில் உள்ள ஈரான் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "மனிதர்களைக் கொன்றுவிட முடியும். ஆனால் அவர்களின் கொள்கைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.
நீங்கள் அயதுல்லா காமேனியைத் தான் கொன்றீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு வாசனைத் திரவியக் குப்பியைத்தான் உடைத்திருக்கிறீர்கள். அதன் நறுமணம் இப்போது எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.
உங்களுக்கு நாகரிகமும் இல்லை, வரலாறும் இல்லை, மானமும் இல்லை... அதனால்தான் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை." என்று பதிவிட்டுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
